Monday, August 6, 2012

கவிஞன் நான்!

கவிஞன் நான்!
 
அற்பு தத்தின்
சொற் பதத்தில்
.. அந்த ரங்க
.. சந்தம் பொங்க
.. ஆடுவேன் - கவி
.. பாடுவேன்.
 
எண்ணம் என்னும்
வண்ணம் மின்ன
.. எக்க ளிப்பின்
.. முக்கு ளிப்பில்
.. ஏறுவேன் - விதி
.. மீறுவேன்
 
மண்ட லத்துச்
செண்டெ டுத்து
.. மையம் பற்றி
.. வையம் சுற்றி
.. மாட்டுவேன் - திறம்
.. காட்டுவேன்
 
காலம் என்ற
ஞால மன்றில்
.. காட்சி யாவும்
.. சாட்சி மேவக்
.. காணுவேன் - வெற்றி
.. பூணுவேன்
 
திங்க ளோடு
தங்க ஊடு
.. தேனி லாவின்
.. வானில் மேவித்
.. தேறுவேன் - இளைப்
.. பாறுவேன்
 
சுந்த ரத்தின்
அந்த ரத்தில்
.. சொக்கும் காதல்
.. மிக்கும் போதை
.. சூழுவேன் - என்றும்
.. வாழுவேன்
 
நாவி யெங்கும்
காவி யங்கள்
.. நவ நிலத்தின்
.. பவனி வைத்தும்
.. நல்குவேன் - பொய்ம்மை
.. வெல்குவேன்
 
பாட்டு வீணை
மீட்டும் ஆணைப்
.. பரவ சத்தின்
.. அருள்வ சத்தில்
.. பாய்குவேன் - சிவம்
.. தோய்குவேன்
 
வாணி அன்னை
பேணி என்னை
.. வைக்கும் அன்பில்
.. மொய்க்கும் இன்பம்
.. வைகுவேன்  - யுகம்
.. செய்குவேன்
 
தீஞ்சொல் தானும்
ஊஞ்சல் ஆன
.. தெய்வம் நேரில்
.. கைவந் தூறத்
.. தேவையே - என்றன்
.. சேவையே

No comments:

Post a Comment