Thursday, August 23, 2012

கொடி மின்னல்

கொடி மின்னல்
 
இருட்டழகி கழுத்தேறி
இடிமுழக்கும் அவள்நடனப்
பொருட்டசைந்து பளபளக்கும்
பொற்சரடே! மின்னலடி!
 
கரியசுவர் மேலிருந்து
காற்றினுக்குத் தக்கபடிச்
சரிகை அலைந் தாடுமலர்ச்
சரக்கொடியோ மின்னலடி!
 
குகைச்சுரங்கம் திறந்தவுடன்
கொடிபறக்க ஓடியெங்கும்
தகைச்சுரங்கம் ஆனதங்கத்
தோரணமோ, மின்னலடி?
 
மழைநீரில் ஆடியவிண்
மங்கைதிசைக் கார்குழலில்
இழைநீவச் சிணுக்கெடுக்கும்
இங்கிதமோ, மின்னலடி?
 
மேகமடர் குகைவழியே
மெல்லஎட்டிப் பார்த்த மயில்
தோகைமடல் விரித்தபடித்
துள்ளுவதோ மின்னலடி?
 
நூல்வலைகள் தாம்விரித்தால்
நொடியில்விழா மீன்களென்று
வேல்வலைகள் தாம்விரித்த
விந்தைகளோ மின்னலடி?
 
எண்ணமிலாச் சிந்தையுள்ளும்
இப்படியே பற்பலவாம்
வண்ணமெலாம் கொண்டுவரும்
வான்கொடையோ மின்னலடி?

No comments:

Post a Comment