Friday, August 17, 2012

அந்தி வந்தது

அந்தி வந்தது
 
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
சிந்திச் சிந்தி இறைத்த பூக்கள்
சிற்பக் கோலம் பூண்டன - அந்தச்
சிதரில் ஒளிப் புதரில் மனம்
சென்று சென்று மீண்டன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
குந்திக் குந்தி எழுந்த சிட்டுக்
குருவி மீண்டும் அமர்ந்தன - அவை
கொத்திக் கொத்தி விழுந்த நெல்லின்
குவியல் யாண்டும் சுமந்தன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
துள்ளித் துள்ளி வெள்ளிக் கிண்ணம்
தொலைவில் எங்கும் உருண்டன - நிலாத்
துளிக ளென்னும் ஒளி அமுதச்
சுவையை மொண்டு புரண்டன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
எள்ளி எள்ளி இறைத்த பொற்கா(சு)
எடுப்பார் இன்றிக் கிடந்தன - அவை
எண்ணி எண்ணி முடியு முன்னே
இரவுப் படை தொடர்ந்தன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
கோடி கோடிச் சிமிட்டல் கொண்டு
குறும்பு விழி பூத்தன - அந்தக்
குறும்பு விழிப் பார்வை எல்லாம்
நிரம்ப மணி கோத்தன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
ஓடி ஓடி மின்மினிகள்
உயர உயர மொய்த்தன - அந்த
உப்பரிகைக் காடனைத்தும்
ஒளிச்சரிகை தைத்தன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
புலர்ந்து புலர்ந்(து) உலைக்களத்தின்
பொரித்து கள்கள் தெறித்தன - அந்தப்
போர்க்களத்தில் மலைகளெல்லாம்
பூவாணமாய்ச் சிரித்தன
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி
 
கலந்து கலந்(து) இருளும் ஒளியும்
கண்ணா மூச்சே ஆடினே - அந்தக்
கால முறை ஆடலுக்கும்
கவிதை வீச்சே கூடின
அந்தி வந்தது அந்தி - ஒரே
அழகு தந்தது முந்தி

No comments:

Post a Comment