Sunday, August 12, 2012

எழிலும் தொழிலும்

எழிலும் தொழிலும்
 
மின்னல் மரகத மேடையிலே - கதிர்ச்
செந்நெல் கரகம்முன் ஆடையிலே
முத்துப் பனித்துளி மொட்டுகள்நான் - வைர
வித்து மணித்துளிச் சொட்டுகள்நான்
 
உள்ளம் வெடித்த நிலங்களிலே - கண்ணீர்
வெள்ளம் வடித்த புலங்களிலே
உழைப்பவர் வேர்வை யுறுதுளிநான் - அங்குக்
களைப்பவர் ஜீவச் சிறுதுளிநான்
 
மஞ்சள் வெயில்வரும் மாலையிலே - கூடிக்
கொஞ்சும் குயில்வரும் வேளையிலே
மனம்முறிந் தோர்தம் மழைக்கண்ணீர்நான் - கூலி
தினமறிந் தோர்தம் பிழைக்கண்ணீர்நான்
 
அந்தர வான அடவியிலே - காயும்
சுந்தர சீனப் புடவையிலே
அள்ளி இறைத்த அழல்மலர்நான் - கோலப்
புள்ளி நிறைத்த தழல்மலர்நான்
 
எழிலென்றும் என்னை எழுதிடுவார் - அதன்
தொழிலென்றும் என்னைத் தொழுதிடுவார்
எழிலெனில் உள்ளேன்மெய் எண்ணத்திலே - அதன்
தொழிலெனில் உள்ளேன்கை வண்ணத்திலே

No comments:

Post a Comment