Sunday, August 19, 2012

ஏன் போனாள்?

ஏன் போனாள்?
 
கோலமிடப் புள்ளி இட்டுக்
கோடிழுக்கா முன்னம்
வாலைநிலாக் கிண்ணிவிட்டேன்
வஞ்ச இரா போனாள்?
 
மல்லிகைப்பூ குவியலிட்டு
மாலைகட்டா முன்னம்
மெல்லநிலாக் கூடைவிட்டேன்
மின்னல் இரா போனாள்?
 
தாதியரோ(டு) ஆட்டமிட்டுத்
தண்ணீர்கொளா முன்னம்
சோதிநிலாக் குடத்தைவிட்டேன்
சொக்கி இரா போனாள்?
 
அரங்கெனவே தோரணமிட்(டு)
ஆடவரா முன்னம்
மருங்கில்நிலா முரசைவிட்டேன்
மங்கை இரா போனாள்?
 
பெண்கள்புடை சூழவிட்டுப்
பேணிக்கொளா முன்னம்
கண்கொள்நிலாக் குழந்தைவிட்டேன்
கன்னி இரா போனாள்?
 
போனதென்ன காரணமோ?
புரியவில்லை யேனும்
வானவன் தன் காதலிக்கே
வாழ்த்துரைக்க லானேன்!

No comments:

Post a Comment