Sunday, August 5, 2012

ஒளியைத் தேடி

ஒளியைத் தேடி
 
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்
.. வழியை நாடி விரைகின்றேன்
.. வாழ்வில் கூடிக் கரைகின்றேன்
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்
 
பொழுதுத் துளியும் யாழாகப்
புலரி வெளியும் பாழாக
.. அழுதும் அதற்கே மாறாக
.. அருணோ தயத்தின் வேராக
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்
 
இதய மூலை ஆய்ந்திட்டேன்
எண்ணச் சோலை பாய்ந்திட்டேன்
.. உதய காலை புகுந்திட்டேன்
.. ஓகோ பொய்தான் மிகுந்திட்டேன்
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்
 
நம்பிக் கையே அகலாக்கி
நாளும் அதையே புகலாக்கி
.. அன்பு மனமும் திரிகொண்டே
.. அதற்கும் மேலோர் நெறிகண்டே
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்
 
முடியா நீண்ட பயணம்தான்
முனைப்பே தூண்டும் அயனம்தான்
.. மடியாய் அதற்கே மயங்கவில்லை
.. மனம்தான் சிறகு; தயங்கவில்லை
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்
 
புதிய யுகத்தின் விடிவொன்று
புகையும் அகத்தின் முடிவென்று
.. எதிலும் துணிச்சல் வரப்பெற்றேன்
.. இதோஇ தோநான் புறப்பட்டேன்
ஒளியைத் தேடி நடக்கின்றேன்
இருளை ஊடிக் கடக்கின்றேன்

No comments:

Post a Comment