Wednesday, August 22, 2012

மயில்

மயில்
 
பதுக்க முடியாப்
பவுன் முத்திரைநீ!
ஒதுக்க முடியா
ஓவியத் திரைநீ!
 
நட்டுவம் இன்றி
நடத்தும் கலைநீ!
கொட்டு முழக்கின்றிக்
குதிக்கும் சிலைநீ!
 
உழைக்காப் புதுமை
உயிர்ப்(பு) அறுவடை நீ!
இழைக்கா இயற்கை
இலக்கியக் கொடைநீ!
 
நீலத் தோகையின்
நேர்துறை முகம்நீ!
கோலத் தனிஎழில்
கொட்டும் யுகம்நீ!
 
அழகு நடன
அரும்பத வுரைநீ!
மெழுகுப் பச்சையின்
மின்னலை நுரைநீ!
 
மழைக்காலத்தின்
மருமகப் பிள்ளைநீ!
திளைக்க மரகதம்
திரண்ட பொற்கிள்ளைநீ!
 
உயிராய்க் கிடைத்த
ஒளிப்புதையல்நீ!
அயராது மகிழ்வேன்
ஆடுக மயில்நீ!

No comments:

Post a Comment