Saturday, July 7, 2012

காமாட்சியம்மன் அந்தாதி (பாடல்கள் 1 - 10)

வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி

படைப்பு:

சக்தி சரணமெனச்
.. சாற்றிப் படைப்பதற்கே
பக்தியொடும் தமிழைப்
.. பாடினேன், அம்பிகைக்கே.

காப்பு

வந்தாதி யாய்நின்ற வண்ணக்கா மாட்சியின்மேல்
அந்தாதி பாடுவதற் கஞ்சலித்தேன் - சிந்தாத
நம்பிக்கை யோடு நடக்குமிந் நூலுக்குத்
தும்பிக்கை யானே துணை

அந்தாதி

நாமாட்சி செய்ய நலம்வரும் வாணர்க்கு
.. நல்லிசையோ(டு)
ஆமாட்சி செய்ய அணிவரும் சொல்யாப்(பு)
.. அரவணைத்துப்
பூமாட்சி செய்யப் புகழ்வரும் வண்ணையம்
.. பொற்கொடியாம்
காமாட்சி செய்ய கருணை வரும்வழி
.. கண்டதுமே. (1)

கண்ட பிணிபோம் கவலை களும்போம்
.. கவனமின்றிக்
கொண்ட பிறவிக் கொடுமைகளும் போம்வெறும்
.. கொள்கைகளாய்
விண்ட பெருமையும் வீராப்பும் போம்புகழ்
.. வெற்றியுமே
செண்டு புடைதரச் சேரும்கா மாட்சியைச்
.. சிந்திக்கவே. (2)

சிந்திப்போம் நாளெல்லாம் சிந்திப்ப தோடும்
.. செழுந்தமிழால்
வந்திப்போம் வாழ்வெலாம் வந்திப்ப தோடும்
.. வழித்துணையாய்
முந்திப்போம் புண்ணிய மூர்த்தியு மாமவள்
.. மொய்ம்புணர்ந்தே
சந்திப்போம் வண்ணையஞ் சக்திகா மாட்சி
.. சரணங்களே. (3)

சரணு மவள்கொண்ட சஞ்சலத் தையெல்லாம்
.. சாடவரும்
முரணு மவள் அன்பின் மூப்பறிந் துண்மை
.. முதுபடைக்கும்
அரணு மவள்பதம் அண்டுவோர்க் கெல்லாம்
.. அபயமருள்
பரணு மவள்பதி வண்ணைக்கா மாட்சி
.. பவமணியே (4)

பவமணி தெய்வப் பதமணி வானோர்
.. பரிந்துணரும்
தவமணி இன்பத் தமிழ்மணி ஈசர்க்குத்
.. தாமுகந்த
சிவமணி எம்மவர் செம்மணி என்றுனைச்
.. சிந்திக்கவே
நவமணி யும்பொனும் நல்குவை வண்ணை
.. நகர்வல்லியே (5)

வல்லியே வல்ல வராகியே வாழ்வுக்கு
.. வாய்த்தஎலாம்
புல்லியே நின்னருட் போகம் அவையெனப்
.. புந்தி கொண்டும்
சொல்லியே அந்தச் சுவையில் திளைப்போம்
.. சுகிர்தமிகு
மெல்லியே வண்ணையில் மேவுமெங் காமாட்சி
.. மெய்யம்மையே (6)

அம்மையே எந்தையே ஆரமு தேஎன்(று)
.. அயர்விலெலாம்
செம்மையே நின்னைச் செபிப்பதால் நேரும்
.. சிறப்பலவோ
இம்மையே தீமை யெலாம்உருக் கொண்டும்
.. எதிர்த்தின்பங்கள்
தம்மையே காண்பதாம் தண்பொழில் வண்ணைத்
.. தயாநிதியே (7)

நிதியே நிதியின் நிறைபயனே எம்
.. நினைவிலுறு
மதியே மதியின் மயமாம் தெளிவே
.. மதியையும்வெல்
விதியே விதியின் விளைவே எமக்கதில்
.. வெற்றியையும்
கதியே தருவண்ணைக் காமாட்சி யாமுமைக்
.. கற்பகமே (8)

கற்பகத் தாளைஎம் காமாட்சி யாளைக்
.. கமலமுகப்
பொற்பகத் தாளைப் பொலிவுடை யாளைமுன்
.. புண்ணியமாம்
சொற்பகுத் தாளைச் சுவையுடை யாளைச்
.. சுயம்புருவாம்
தற்பகத் தாளைத் தொழுதவள் தாளைத்
.. தழுவுமினே (9)

தழுவு வதுமன்னை தாமரைத் தாளினைத்
.. தாழிசையில்
தொழுவது மன்னை துணையெனச் சொல்லும்
.. துறையதுவாய்
விழுவது மன்னையை வேண்டி அவள்முன்
.. விருத்தமெனும்
வழுவது மன்னைகா மாட்சியே நீக்கெனும்
.. வாக்கினிதே (10)

No comments:

Post a Comment