Thursday, July 5, 2012

துளித் துளி - தனியன்கள்

தனியன்கள்
 
நழுவல்
 
குழந்தையைத் தெய்வம்
.. தழுவிக் கிடந்தது
குழந்தை வளரவும்
.. நழுவி நடந்தது
 
ஊற்று
 
மணலைத் தோண்டினேன்
.. தண்ணீர் வந்தது
மனத்தைத் தோண்டினேன்
.. கண்ணீர் வந்தது
 
அக்'கறை'
 
பிறைநிலா பார்த்தேன்
.. குறையென இல்லை
நிறைநிலா பார்த்தேன்
.. கறையெனும் தொல்லை
 
கழுகுக்கண்
 
பறப்பது என்னவோ
.. பரவெளிமேல்தான் - பார்வை
இருப்பது என்னவோ
.. தெருஎலி மேல்தான்
 
நோட்டம்
 
கட்சிகள் எல்லாம்
.. காசுக்குப் போர்வை
லட்சியம் எல்லாம்
.. லாபத்தின் பார்வை
 
கூடினால்
 
ஊடல்மேல் தினமும்
.. உப்புக் கீடுதான் - கொஞ்சம்
கூடுமேல் பணமும்
.. குப்பைக் காடுதான்
 
சமுதாயம்
 
ஊரைக் கூட்டினேன்
.. தேரோட வில்லை
தேரைப் பூட்டினேன்
.. ஊர்கூட வில்லை
 
சீருடை
 
சட்டைகள் உரித்தே
.. சர்ப்பங்கள் திளைக்கும் - கட்சிச் (பல)
சட்டைகள் தரித்தே
.. அற்பங்கள் பிழைக்கும்
 
முதுமை
 
காயே பழுத்தால்
.. கனியாம் என்பர்
கனியே பழுத்தால்
.. இனி,யார் தின்பர்?
 
சுற்றம்
 
பழத் தோட்டத்தைப்
.. பறவைகள் சுற்றும்
பணத் தோட்டத்தை
.. உறவுகள் சுற்றும்
 
இலக்கணம்
 
உள்ளம் விரித்தால்
.. உச்சிப் புலவர்
கள்ளம் சிரித்தால்
.. கட்சித் தலைவர்
 
ஞானோதயம்
 
புத்தர் மலர்ந்தார்
.. போதி மரத்தில் - பல
எத்தர் மலர்ந்தார்
.. சாதி நிறத்தில்
 
சுயநலம்
 
தேவை என்றால்
.. தேடும் உலகம்
சேவை என்றால்
.. ஓடும், விலகும்
 
சிரஞ்சீவி
 
சொற்களைச் சுருக்குவோர்
.. சுகம்பெற வாழ்வார்
சுகங்களைச் சுருக்குவோர்
.. யுகம்பெற ஆள்வார்
 
மீறுங்கால்
 
ஆவல் மிகமிகத்
.. தாவல் நேரும்
தாவல் மிகமிகக்
.. காவல் மீறும்

No comments:

Post a Comment