Wednesday, July 18, 2012

காமாட்சியம்மன் அந்தாதி (பாடல்கள் 61 - 70)

வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
 
(பாடல்கள் 61 - 70)
 
இருப்பவ ளாய்மனம் எண்ணும் அனைத்தும்
.. இயன்றபிழை
பொறுப்பவ ளாயந்தப் பொய்ம்மை களைமுன்
.. பொறுத்திருக்கும்
அறுப்பவ ளாயெமை யாதரித் தாண்டாங்(கு)
.. அறநெறியில்
திருப்புவ ளாகிய தேவிகா மாட்சி
.. திறம்பெரிதே (61)
 
பெரிதே எனவுனைப் பேணிக்கொண் டாடிப்
.. பெறுவதற்கும்
அரிதே உலகம் உடங்கலும் ஆன்ற
.. அருண்மொழிகள்
வறிதே உனையாம் வணங்கவும் ஆசைகா
.. மாட்சியதாற்
சிறிதே புகன்றதிச் சேயரும் வேறென்ன
.. செய்வதுண்டே (62)
 
உண்டே பிறவிக் குறுதுணை காமாட்சி
.. ஒண்கமலச்
செண்டே எனுமடி சிந்தித்து நாளும்
.. செறிந்தவற்றில்
வண்டே எனவும் வலம்வரு வோம்அவ்
.. வரமொன்றையே
கொண்டே மெனிற்பின் குறியென்ன வேண்டும்
.. குவலயத்தே (63)
 
குவலய மேநின் கொலுவெனக் கண்டும்
.. குதிகுதித்துச்
சுவைலய மாயந்தச் சுந்தர இன்பத்தில்
.. சொக்கிநின்றோம்
நவலய மாகி நளினிபீ டத்தின்
.. நயஉச்சியில்
தவலய மாகுவை தாயாம்கா மாட்சி
.. தயைபண்ணியே (64)
 
பண்ணைக் குழைத்துப் பதமும் குழைத்துப்
.. பரவசமாய்
விண்ணைக் குழைத்து வியப்பும் குழைத்தநின்
.. வீறுரைப்பேன்
கண்ணைக் குழைத்(து) அதில் கங்குல் குழைத்தும்கா
.. மாட்சி என்றே
மண்ணைக் குழைத்து மகாலிங்க மாக்கி
.. மகிழ்ந்தவளே (65)
 
மகிழ்ந்தவ ளேநின் மலரடி அன்பர்
.. மனமுருக
நெகிழ்ந்தவ ளேயந் நினைவும் கனவுமெய்
.. நிச்சயமாய்
முகிழ்ந்தவ ளேயண்ட முட்டை யிலுமொரு
.. மோகனமாய்
வகிர்ந்தவ ளேஎம்கா மாட்சி வரம்தர
.. வழக்கென்னவே (66)
 
என்வழக் காயினும் ஏற்றது கொள்கஓர்
.. இச்சையினால்
பொன்வழக் கென்றோ பொருள்வழக் கென்றோ
.. புகுந்துன்னிடம்
முன்வழக் காட முனைத்திட வில்லைஇம்
.. மூவுலகும்
தன்வழக் காயருள் தாங்குகா மாட்சிஎம்
.. தாரகமே (67)
 
தாரகம் நீஎத் தருக்கமும் நீகொளும்
.. தந்திரநூல்
சாரகம் நீமறைச் சாத்திரக் கோவைநீ
.. சண்பகப்பூ
ஆரக மார்பொடும் ஆயிரம் சோதி
.. அவிர்பரிசாய்ப்
பாரகம் பீரம் பரப்புவை வண்ணை
.. பணைப்பவளே (68)
 
பணைப்பவ ளாகிப் பலகாலும் தேடிப்
.. பணியுமெனை
அணைப்பவ ளாகி அரனெனும் ஊற்றோ(டு)
.. அமுதமயம்
பிணைப்பவ ளாகிப் பெருந்தவ மாகிஎன்
.. பித்துநெஞ்சம்
மணைப்பவ ளாகும்கா மாட்சிஎன் னென்பேனுன்
.. மாட்சிமையே (69)
 
மாட்சிமெய் யுண்டே மறவா துனைத்தொழும்
.. மக்கட்கெலாம்
ஆட்சிமெய் யுண்டே அமருல கென்றும்
.. அமர்ந்துலவும்
காட்சிமெய் யுண்டே கருதோர் இமைப்பும்
.. கரம்குவிக்கச்
சாட்சிமெய் யுண்டேமா சக்திகா மாட்சியுன்
.. சார்பினர்க்கே (70)

No comments:

Post a Comment