Tuesday, July 31, 2012

துளித் துளி - வாய்ப்புகள்

துளித் துளி - வாய்ப்புகள்
 
சந்தர்ப்பச் சாக்கு
வந்தொப்பப் போக்கு
 
தூண்டும் திரியில் - சுடர்
மீண்டும் பொரியில்
 
கண்கொத்திப் பாம்பு
பின் கொத்த வீம்பு
 
தூண்டிலில் மீனாய்
தாண்டிடும் வீணாய்
 
கொத்தினால் கொக்கு
எத்தினால் மக்கு
 
தழுவினால் அதிர்ஷ்டம்
நழுவினால் அது இஷ்டம்
 
பட்டாம் பூச்சி
விட்டால் போச்சு
 
விருப்பங்கள் கோபுரம்
திருப்பங்கள் நேர்புறம்
 
வாழ்க்கை வரைக்கும்
வேட்கை முறைக்கும்
 
கனாக்களில் களிக்கும்
வினாக்களில் பழிக்கும்
 
அன்றாட ஆர்வம் - பின்
சென்றோடும் சோர்வும்
 
வரவரப் பார்த்திரு - கை
பெறப்பெறக் காத்திரு

Sunday, July 29, 2012

துளித் துளி - அடக்கம்

துளித் துளி - அடக்கம்
 
அலைகடலே முழங்கும் - முத்தை
ஆழ்கடலே வழங்கும்
 
புலன்கள் அடங்கும் - எனில்
நலன்கள் தொடங்கும்
 
பணிவே துணியும் - அத்
துணிவே பணியும்
 
தாழத் தெரிந்தவன் - நன்கு
வாழப் புரிந்தவன்
 
அடக்கம் ஆயிரம் - அதன்
தொடக்கமாய் இரும்
 
பேச்சில் மவுனம் - செயல்
மூச்சில் கவனம்
 
நாநயம் சுருக்கும் - அது
ஊனையும் உருக்கும்
 
தானே தாழ்ந்தவர் - புகழ்
வான்நேர் வாழ்ந்தவர்
 
பணிவாய்ப் படர்ந்தவர் - செயல்
துணிவாய்த் தடர்ந்தவர்
 
அணிஎன அணிவது
பணிஎனப் பணிவது
 

Saturday, July 28, 2012

துளித் துளி - கவிதை(2)

துளித் துளி - கவிதை(2)
 
கருத்தால் கவியும் - சொல்
திறத்தால் குவியும்
 
எண்ணம் எழும்பும் - சீர்
வண்ணம் விளம்பும்
 
செஞ்சொல் சிற்பம் - அவை
நெஞ்சம் ஒப்பும்
 
சொற்களும் முன்னால் - பலாச்
சுளைகளும் பின்னால்
 
உள்ளூறும் முன்னால் - சொற்
கள்ளூறும் பின்னால்
 
சிந்தைச் சித்திரம் - சொல்
விந்தை விசித்திரம்
 
பல்லக் காட்டும் - பொருள்
சொல்லக் கூட்டும்
 
உரைகள் இருந்தால் - பொய்த்
திரைகள் புகும்தாள்
 
சந்தச் சதிர்கள் - அவை
சந்தப் புதிர்கள்

Friday, July 27, 2012

துளித் துளி - செயல்திறம்

துளித் துளி - செயல்திறம்
 
வயலுக்கு வரப்பு தேவை
செயலுக்கு சிறப்பு தேவை
 
ஆற்றுதல் நலமேல்
போற்றுதல் தலைமேல்
 
செதுக்கினால் சிற்பம் - உளி
ஒதுக்கினால் அற்பம்
 
உயர்ச்சி எவ்வொன்றும் - செயல்
அயர்ச்சியே வென்றும்
 
சுரங்கம் இருப்பான் - நாளை
அரங்கம் சிறப்பான்
 
முயற்சியே முந்தும் - செயல்
உயர்ச்சியே உந்தும்
 
செய்தால் ஜெயம்தான்
செய்யான் பயந்தான்
 
புயல்வேகம் போருக்கு
செயல்வேகம் சீருக்கு
 
முயற்சியில் முனையான்
அயர்ச்சியில் விளையான்

Thursday, July 26, 2012

துளித் துளி - விருப்பங்கள்

துளித் துளி - விருப்பங்கள்
 
விருப்பங்கள் கோபுரம்
திருப்பங்கள் நேர்புறம்
 
வாய்ப்புகள் சிலர்க்கு
ஏய்ப்புகள் பலர்க்கு
 
வாயடிக்கே வாய்க்கும்
காயடிக்கே காய்க்கும்
 
வசந்தமாய் வரும்படி
கசந்துமாய்ப் பெறும்படி
 
சந்தர்ப்பம் சாதிக்கும்
வந்தற்பம் வாதிக்கும்
 
வருவன வரட்டும்
பெறுவன பெறட்டும்
 
இறைவன் ஒருவன்
எதுவும் தருவன்
 
நிறைவெனப் பெறுவோம்
நிலையாமை மறவோம்
 
காலப் போக்கும் - அதன்
மூலம் ஏற்கும்

Wednesday, July 25, 2012

துளித் துளி - தொன்று தொட்டு

துளித் துளி - தொன்று தொட்டு

பிராயம் தோறும் - அபிப்
பிராயம் மாறும்

பருவம் தோறும் - கொண்ட
உருவம் தேறும்

வாரம் தோறும் - ஆர
வாரம் சேரும்

காலம் தோறும் - அதன்
கோலம் மீறும்

நாடு தோறும் - பண்
பாடே வேறும்

வீடு தோறும் - அன்பு
கூடச் சீறும்

தோற்றம் தோறும் - எதிர்
மாற்றம் ஏறும்

வாழ்வு தோறும் - ஆம்
யாவும் நேரும்

உள்ளம் தோறும் - நேர்
கள்ளம் கூறும்

Tuesday, July 24, 2012

காமாட்சியம்மன் அந்தாதி நூற்பயன்

வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
 
நூற்பயன்
 
எண்ணுவன கூடும் இணையில்லா வாழ்வுதரும்
நண்ணுவன வெல்லாம் நலமாகும் - திண்ணம்
அருமையுறு காமாட்சி அந்தாதி நூறும்
பெருமையுற ஓதப் பெறின்
 
மடக்கு
 
அந்தாதிப் பாடில்லா அம்மைக்குக் கட்டளையால்
அந்தாதி பாடுவார்க் கன்னவள்தாம் - அந்தாதி
என்னுமாய் உற்றதுணை ஏற்றருள்வாள் மஞ்சளும்பூப்
பொன்னுமாய்ச் செல்வம் பொலிந்து
 
(அந்தாதி = அந்தம் + ஆதி, அந்த + ஆதி, அம் + தாதி)
 
கி. வா. ஜ அவர்களின் பாராட்டுப்பா
 
புவிமணி நெற்றரின் யாரே அதைமெச்சிப்
.. போற்றல்செயார்
சவிமணி யாங்கதிர் வானூறின் யாவரே
.. தாழகிலார்
செவிமணிச் சொற்கொள் தமிழ ழகன்றமிழ்
.. தந்துசந்தக்
கவிமணி என்றும் பெயர்பெற்று நின்றான்
.. கவினுறவே

Monday, July 23, 2012

காமாட்சியம்மன் அந்தாதி (பாடல்கள் 91 - 100)

வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
 
(பாடல்கள் 91 - 100)
 
பரியெனக் காற்றையும் பற்றி அதன்மேல்
.. பறந்துயர்வான்
சரியெனக் கோள்களும் அண்டமும் கைக்குள்
.. சமைத்திருப்போம்
புரியெனும் காஞ்சிப் புனிதரே காம்பரப்
.. புண்ணியர்க்கே
உரியநம் தேவிகா மாட்சியும் வண்ணையிங்(கு)
.. உற்றிடவே (91)
 
உற்றிடு வாளந்த ஓங்காரி காமாட்சி
.. ஒண்பொருளைக்
கற்றிடு வார்க்குக் கலைகளுண் டாம்மெய்க்
.. கவிதையுண்டாம்
பெற்றிடு வார்சிவப் பேரின்ப போகப்
.. பெருமையதும்
முற்றிடு மாறிவை மூதுரை யாகும்
.. முழுமையுமே (92)
 
முழுமையும் நீயென மொய்த்துநின் சந்நிதி
.. முற்றத்திலே
எழுமையும் கூடி இயலிசை பாடி
.. இணையிலராய்த்
தொழுமையும் செய்குவம் துள்ளியும் ஆடுவம்
.. தோத்திரம்வாய்ச்
செழுமையும் பாடிச்சீர்க் காமாட்சி வெல்கனெச்
.. செப்புவமே (93)
 
செப்பியும் பொல்லாச் சிறுவினைக் கெல்லாம்
.. சிதறுமனம்
தப்பியும் வெல்லுமித் தாரணி நாடகத்
.. தன்மையினை
ஒப்பியும் ஈங்குயிர்ப் புற்றனம் காமாட்சி
.. உன்னருளாய்க்
குப்பியும் பூதங்கள் கொண்டது போல்நின்னுடன்
கூடினமே (94)
 
கூடின வாறு குறைவிலா வாழ்வும்
.. கொடுத்தெமக்கு
நாடின வாறு நலம் செயச் செங்கை
.. நளினத்திலே
சாடின வாறந் தகனமே ஓடத்
.. தருமபயம்
தேடின வாறும் திகழும்கா மாட்சி
.. திருவருளே (95)
 
அருளே பொருளாய் அறிவே விரிவாய்
.. அமர்ந்துலகுத்
திரளே சிவமாய்த் தெளிவே நவமாய்த்
.. திளைத்திருக்க
மருளே கடந்துகா மாட்சியாம் அன்னை
.. மனோன்மணியாய்
இருளே கடிய எழுந்தனை ஞான
.. இரவியன்றே (96)
 
இரவியும் திங்களும் எண்ணுசேய் மாலும்
.. இரண்டரவும்
முருவிய பொன்னொடு மங்கல வெள்ளியும்
.. மந்தனுமாய்
நிரவிய கோளெலாம் நேர்பெறக் காமாட்சி
.. நின்னன்பர்பால்
கருவியு மாயவர் காலடி வைகுமோர்
.. கண் இமையே (97)
 
இமையே இமயா இமையோரும் மண்ணோரும்
.. ஏத்தவரும்
உமையே சிவானந்த உத்தமி காமாட்சி
.. ஊழ்வலியின்
சுமையே உயிர்க்கெலாம் சூழ்தல் தவிர்க்கச்
.. சுகவண்ணையில்
நமையே புரந்தும் நடந்தனள் என்றோதும்
.. நான்மறையே (98)
 
நான்மறை வாழ்க எந் நல்லோரும் வாழ்க
.. நவிலுமன்புக்
கோன்முறை வாழ்க குடிமையும் வாழ்க
.. குதூகலமும்
தான்மறை யாமல் தழைத்தெங்கும் வாழ்க
.. தருமமும்தன்
கான்முறை யூன்றிடக் காமாட்சி தாய் இடும்
.. கட்டளையே (99)
 
கட்டளை எனற கலித்துறை நூறு
.. கவிதைகளால்
இட்டளை கின்ற இவ் வின்றமிழ் மாலை
.. இனிதெவரும்
முட்டளை என்றதம் மூழைக்கா மாட்சி
.. முறித்திடவாய்
மட்டளை வர்சிவ மாகியும் வாழ்வர்நா
.. மாட்சிசெய்தே (100)

Friday, July 20, 2012

காமாட்சியம்மன் அந்தாதி (பாடல்கள் 81 - 90)

வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
 
(பாடல்கள் 81 - 90)
 
உத்தமி காமாட்சி உய்யுமா றுன்புகழ்
.. ஒன்றினையே
நித்தமிவ் வேழை நெடுந்தமிழ் மாலையாய்
.. நேரிரந்தேன்
சித்த மிளகிச் சிலம்படி தூக்கிஎன்
.. சென்னியிலே
வைத்து மிகுநலம் வாழ்விக்க வேண்டும்
.. வரமிவையே (81)
 
வரமிவை என்றுமெய் வாயாரப் போற்றி
.. வழிபடநின்
திறமிவை என்று தினம்தினம் முந்துவன்
.. தேடியுமுட்
புறமிவை என்றனு பூதியாற் காமாட்சி
.. பூரணிவான்
அறமிவை என்றுன் அருளுக் கிரந்தேன்
.. அடிமையுற்றே (82)
 
அடிமையுற் றோமெனில் நின்னன்பர்க் கல்லால்
.. அயலிலில்லை
மிடிமையுற் றோமெனில் மேவும் குறைகளை
.. மேலறுத்துக்
குடிமையுற் றோமெனில் கொண்டது நின்னருட்
.. கோயிலன்றோ
படிமையுற் றோமெனும் பாங்குகா மாட்சி
.. பசுங்கொடியே (83)
 
கொடியே கொடிமலர்க் கொன்றையைச் சூடிக்
.. குனித்தபிரான்
பிடியே எனுமாம் பிராட்டிகா மாட்சிநின்
.. பெற்றியெலாம்
அடியே னிவையென் றறியும் தரமோ
.. அகல்வெளியின்
முடியே தொடவும் முனைவது போலொரு
.. மூடமையே (84)
 
மூடமை என்னினும் முந்தப் பலவாய்
.. முறைதொகுத்துச்
காடமை நீற்றுக் கறைக்கண்ட னாரைக்
.. கருதித்தவ
பீடம மர்ந்தநின் பெண்மையைப் போற்றும்
.. பெருமையில்வான்
வீடமை வாமன்றோ காமாட்சி வெற்றி
.. விளையுமதே (85)
 
விளையும தாய்எம் வினைக்கொரு மூலமும்
.. விண்டறிந்து
களையும தாய்ச்சிவ காட்சியு மெந்தம்
.. கடைவிழிக்கே
திளையும தாய்நவ தேவிகா மாட்சியுன்
.. சீரடியில்
வளையும தாகஎம் சென்னியை வைத்தோம்
.. வணக்கமென்றே (86)
 
வணக்கமென் றோர்க்கெலாம் வானர சாளும்
.. வளமுமவள்
இணக்கமென் றோர்க்கெலாம் இங்கித வாழ்க்கையும்
.. ஈந்தவள்தான்
மணக்குமென் றோர்க்கெலாம் மங்கலப் பேறும்
.. மதித்தருள்வாள்
சுணக்கமின் பேறபல் சுழல்மெத்தை சூழ்வண்ணைச்
.. சுந்தரியே (87)
 
சுந்தரி சித்தச் சுவர்கடந் தாங்குச்
.. சுகவெளிகொள்
அந்தரி பூதங்கள் ஐந்தையும் ஆட்டி
.. அதன்விளையாட்
டுந்தரி யோக யுகாந்தரி கோடி
.. உதயநெற்றிச்
சிந்துரி காமாட்சி செம்பொருள் உன்றன்
.. சிறப்பிவையே (88)
 
இவையே சிறப்பென் றிறுதி உரைக்க
.. இயலுவதும்
நவையே மதன்கணை நாண்மலர் ஐந்தும்
.. நமனைவெல்லக்
கவையேறு பாசமும் கைக்கொண்ட தெய்வமாக்
.. கன்னிகையும்
சிவையேகா மாட்சியுன் சீர்த்தியுண் டின்னுமெம்
.. சிந்தனைக்கே (89)
 
சிந்தனைக் கும்படாச் செம்பொரு ளாகிச்
.. சிதம்பரமாய்
வந்தனைக் கும்படா வாறாப்பால் நின்று
.. வரும்விதியின்
நிந்தனைக் கும்படா தெம்மையு மேசிவ
.. நிர்மலமேல்
பந்தெனக் கூத்து பயில்வைகா மாட்சி
.. பராபரியே (90)

Thursday, July 19, 2012

காமாட்சியம்மன் அந்தாதி (பாடல்கள் 71 - 80)

வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
 
(பாடல்கள் 71 - 80)
 
சார்பவர்க் கெல்லாம் சரணா லயமும்
.. சலனமறுத்(து)
ஓர்பவர்க் கெல்லாம் உறுதிப் பொருளாய்
.. உணர்ந்துணர்ந்து
நேர்பவர்க் கெல்லாம் நிலைகொள் துணையும்
.. நிகழ்பவளாய்த்
தேர்பவள் ஆவதும் வண்ணைக்கா மாட்சி
.. திருமகளே (71)
 
திருமகள் வானுறு தேவரும் கூடித்
.. திரண்டுதொழ
ஒருமகன் ஆகம உட்பொருள் யாவுமே
.. உய்த்துணர
வருமகள் செல்வியும் வாக்கெனும் கல்வியும்
.. வாய்த்தவிழிப்
பெருமகள் ஆகிப் பிறங்குவள் காமாட்சி
.. பெண்கிளியே (72)
 
கிளியே கிளிதரும் கின்னரி யாகிக்
.. கிளர்சுகமே
எளியே மெனயாம் இருந்துமுன் மாண்பினை
.. என்னென்றெலாம்
ஒளியே பெறுநெஞ் சுரைவாய்ப் படுத்தி
.. உணர்ந்தனம் நின்
அளியேகா மாட்சி யணைவதி லேஎமக்
.. கார்தடையே (73)
 
தடையெது நேரினும் தாயுனை எண்ணியே
.. தாங்கிவிடப்
படையது வாகிப் பணைக்க எம் தோளிற்
.. பனைவலியாய்
உடையதும் நீயன்றோ ஓங்காரி காமாட்சி
.. உட்கமலப்
புடையது கூடிப் புவனமூன் றாளும்
.. புரந்தரியே (74)
 
புரந்தரி மாதவப் புண்ணியம் நெஞ்சிற்
.. பொலிந்தருளும்
நிரந்தரி அன்பர் நெடுங்குறை யெல்லாம்
.. நிவர்த்திக்கவே
உரந்தரி பாசமும் ஒண்கணை ஐந்தும்
.. உயிர்ப்பொருட்டாய்க்
கரந்தரி சக்தியக் காமாட்சி என்பதும்
.. கண்கொள்ளுமே (75)
 
கொள்ளவும் கொண்டு குறைவிலாக் கல்வி
.. குலதனமாய்
விள்ளவும் கொண்டு வியப்புக்கும் அப்பால்
.. வியப்பரிதாய்
அள்ளவும் கொண்டுளே ஆனந்த மாகி
.. அறிவமுதம்
தெள்ளவும் கொண்டு தெளிவிக்கும் காமாட்சி
.. தீந்தமிழே (76)
 
தமிழே தமிழில் தழைக்கும்கா மாட்சி
.. தமிழதையே
குமிழேறி இன்பம் கொழிக்கக் குமர
.. குருபரர்பால்
சிமிழே எனும்வாய்ச் சிறுமியாய்ப் போந்துச்
.. செவிமடுத்தும்
உமிழே றோளிப்பரி சாரமன்னார்க்கன்(று)
.. உதவினையே (77)
 
வினையே செறிந்த விரைவுகொண் டெம்மை
.. விரட்டியொரு
முனையே ஒதுக்க முனையும் தருணம்
.. முகமனின்றி
அனையே எனவுன் அடைக்கலம் சார்வோம்
.. அதனையல்லால்
நினையேம்கா மாட்சி நிலையிலா எண்ணமெந்
.. நெஞ்சுக்குமே (78)
 
நெஞ்சுக்கும் நெஞ்சென நிர்மலா காசம்
.. நெடிதுகண்டே
அஞ்சுக்கும் அஞ்சென ஆங்கதில் தோன்றி
.. அடிமுடியாய்
மஞ்சுக்கும் மஞ்சென மாவடிச் சேவைக்கா
.. மாட்சிஎன்றே
பஞ்சுக்கும் பஞ்செனப் பாதம் நடந்தாய்
.. பகவதியே (79)
 
பகவ தியும்நீ பணிகுவார்க் கெல்லாம்
.. பரிந்தருளும்
சுகவ தியும்நீ சுகானு பவத்தில்
.. சுகித்திருக்கத்
தகவ தியும்நீ தயாள குணத்திற்கோர்
.. தாய்மையுமாய்
யுகவ தியும்நீ ஒளிகோடிக் காமாட்சி
.. உத்தமியே (80)

Wednesday, July 18, 2012

காமாட்சியம்மன் அந்தாதி (பாடல்கள் 61 - 70)

வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
 
(பாடல்கள் 61 - 70)
 
இருப்பவ ளாய்மனம் எண்ணும் அனைத்தும்
.. இயன்றபிழை
பொறுப்பவ ளாயந்தப் பொய்ம்மை களைமுன்
.. பொறுத்திருக்கும்
அறுப்பவ ளாயெமை யாதரித் தாண்டாங்(கு)
.. அறநெறியில்
திருப்புவ ளாகிய தேவிகா மாட்சி
.. திறம்பெரிதே (61)
 
பெரிதே எனவுனைப் பேணிக்கொண் டாடிப்
.. பெறுவதற்கும்
அரிதே உலகம் உடங்கலும் ஆன்ற
.. அருண்மொழிகள்
வறிதே உனையாம் வணங்கவும் ஆசைகா
.. மாட்சியதாற்
சிறிதே புகன்றதிச் சேயரும் வேறென்ன
.. செய்வதுண்டே (62)
 
உண்டே பிறவிக் குறுதுணை காமாட்சி
.. ஒண்கமலச்
செண்டே எனுமடி சிந்தித்து நாளும்
.. செறிந்தவற்றில்
வண்டே எனவும் வலம்வரு வோம்அவ்
.. வரமொன்றையே
கொண்டே மெனிற்பின் குறியென்ன வேண்டும்
.. குவலயத்தே (63)
 
குவலய மேநின் கொலுவெனக் கண்டும்
.. குதிகுதித்துச்
சுவைலய மாயந்தச் சுந்தர இன்பத்தில்
.. சொக்கிநின்றோம்
நவலய மாகி நளினிபீ டத்தின்
.. நயஉச்சியில்
தவலய மாகுவை தாயாம்கா மாட்சி
.. தயைபண்ணியே (64)
 
பண்ணைக் குழைத்துப் பதமும் குழைத்துப்
.. பரவசமாய்
விண்ணைக் குழைத்து வியப்பும் குழைத்தநின்
.. வீறுரைப்பேன்
கண்ணைக் குழைத்(து) அதில் கங்குல் குழைத்தும்கா
.. மாட்சி என்றே
மண்ணைக் குழைத்து மகாலிங்க மாக்கி
.. மகிழ்ந்தவளே (65)
 
மகிழ்ந்தவ ளேநின் மலரடி அன்பர்
.. மனமுருக
நெகிழ்ந்தவ ளேயந் நினைவும் கனவுமெய்
.. நிச்சயமாய்
முகிழ்ந்தவ ளேயண்ட முட்டை யிலுமொரு
.. மோகனமாய்
வகிர்ந்தவ ளேஎம்கா மாட்சி வரம்தர
.. வழக்கென்னவே (66)
 
என்வழக் காயினும் ஏற்றது கொள்கஓர்
.. இச்சையினால்
பொன்வழக் கென்றோ பொருள்வழக் கென்றோ
.. புகுந்துன்னிடம்
முன்வழக் காட முனைத்திட வில்லைஇம்
.. மூவுலகும்
தன்வழக் காயருள் தாங்குகா மாட்சிஎம்
.. தாரகமே (67)
 
தாரகம் நீஎத் தருக்கமும் நீகொளும்
.. தந்திரநூல்
சாரகம் நீமறைச் சாத்திரக் கோவைநீ
.. சண்பகப்பூ
ஆரக மார்பொடும் ஆயிரம் சோதி
.. அவிர்பரிசாய்ப்
பாரகம் பீரம் பரப்புவை வண்ணை
.. பணைப்பவளே (68)
 
பணைப்பவ ளாகிப் பலகாலும் தேடிப்
.. பணியுமெனை
அணைப்பவ ளாகி அரனெனும் ஊற்றோ(டு)
.. அமுதமயம்
பிணைப்பவ ளாகிப் பெருந்தவ மாகிஎன்
.. பித்துநெஞ்சம்
மணைப்பவ ளாகும்கா மாட்சிஎன் னென்பேனுன்
.. மாட்சிமையே (69)
 
மாட்சிமெய் யுண்டே மறவா துனைத்தொழும்
.. மக்கட்கெலாம்
ஆட்சிமெய் யுண்டே அமருல கென்றும்
.. அமர்ந்துலவும்
காட்சிமெய் யுண்டே கருதோர் இமைப்பும்
.. கரம்குவிக்கச்
சாட்சிமெய் யுண்டேமா சக்திகா மாட்சியுன்
.. சார்பினர்க்கே (70)

Monday, July 16, 2012

காமாட்சியம்மன் அந்தாதி (பாடல்கள் 51 - 60)

வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
 
 
(பாடல்கள் 51 - 60)
 
விழைபவள் முன்னை விரும்பி விரும்பி
.. விழைபவர்க்கும்
குழைபவள் அன்னவர் கோரிக்கை ஏற்றுக்
.. கொடுப்பதற்கும்
தழைபவள் ஏன்றஎந் தாயினும் சாலத்
.. தயவினுக்கும்
இழைபவள் அல்லவோ என்றும் காமாட்சி
.. இறையவளே (51)
 
இறையவள் நீசொலும் என்னரு பேதம்
.. எனைத்திலுமே
மறையவள் நீஅதன் மாற்றமும் நீசொல்
.. மகிமைகுன்றா
நிறையவள் நீஎந்த நிச்ச யமும்நீ
.. நெடுந்தருக்கப்
பொறையவள் நீவண்ணை பூத்துக்கா மாட்சி
.. பொருந்துவையே (52)
 
பொருந்துவ தன்றிப் புலைமயக் காய்வெறும்
.. பொய்ம்மையிலே
வருந்துவ தன்றி வடவண்ணைத் தெய்வமெம்
.. வாழ்வுக்கரண்
திருந்துவ தாகத் திறமொடு கூட்டும்
.. தினம்தினம்யாம்
பெருந்தவம் காமாட்சி யன்னையைப் போற்றும்
.. பெருமையிதே (53)
 
பெருமையும் உண்டு பிறவுமே உண்டு
.. பெறுவனவான்
அருமையும் உண்டருள் ஆட்சியும் உண்டிவ்
.. வகிலமெலாம்
செருமையும் உண்டெனிற் செந்நெறி காமாட்சி
.. சீர்செயவே
ஒருமையும் உண்டுள் ளொளியதும் உண்டீ(து)
.. உறுதியன்றே (54)
 
உறுதிப் பொருளாய் உற்பொரு ளாயெலாம்
.. ஊன்றியுணர்ந்(து)
இறுதிப் பொருளாய் இறைபொரு ளாய்நீ
.. இருந்தமைகண்(டு)
அறுதிப் பொருளாய் அறாத பொருளாய்
.. அறிந்தமட்டும்
கருதிப் பொருள் நினைக் கண்டோமெங் காமாட்சி
.. கைகுவித்தே (55)
 
கைகுவிப் பாரெனில் காணவர் நெஞ்சக்
.. கமலத்திலே
பொய்குவிப் பாரவர் பூசனை யாறு
.. பொழுதிலுமே
செய்குவிப் பாரவர் சிந்தை யெலாம்சிவ
.. கீர்த்தி என்றே
மெய்குவிப் பார்வண்ணைக் காமாட்சி பக்தி
.. மிகைபெறவே (56)
 
மிகைபெற உண்டுமேன் மேலும் பயன்கள்
.. மிளிர்வனவாய்த்
தகைபெற உண்டு தனமொடு கல்வி
.. தழைத்தநடை
வகைபெற உண்டு வளம்பெறு வாழ்வும்
.. வளர்வதுண்டே
தொகைபெறச் சிங்காரத் தோட்டம்சூழ் காமாட்சி
.. தொன்மகளே (57)
 
தொன்மக ளேநலம் தோன்றப் பலவாய்த்
.. துறைகிளரும்
நன்மக ளேதமிழ் நாவிற் பழுத்து
.. நயந்திருக்கும்
சொன்மகளேஎச் சுகமும் பெறவே
.. சுரந்தருள்நீ
பொன்மக ளேபுடை போற்றுங்கா மாட்சியாம்
.. பொற்கொடியே (58)
 
பொற்கொடி காமாட்சி பூத்தநின் பீடத்தோர்
.. பூம்படியாய்க்
கற்கொடி யேனைக் கருணைகொண் டாக்கின்
.. கருதுபல்லூழ்
முற்கொடி தேஎன மூண்டன வாய்ச்சற்றும்
.. முன்நிற்பவோ
விற்கொடி யேறி விழியர சாள்பிறை
.. வேணியளே (59)
 
வேணிநீள் நல்ல வரைமலர்ச் செல்விபல்
.. வித்தைக்குமே
வாணிநீ நல்லமெய் வாழ்வுக்கும் அப்பால்
.. வருகதிக்கும்
தோணிநீ நல்ல துறையாம் சிவநெறி
.. துய்ப்பதற்கும்
ஏணிநீ நல்லாய்எம் காமாட்சி எங்கும்
.. இருப்பவளே (60)

Sunday, July 15, 2012

காமாட்சியம்மன் அந்தாதி (பாடல்கள் 41 - 50)

வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
 
(பாடல்கள் 41 - 50)
 
ஆதிக்கும் ஆதியாய் அநாதியா மென்ற
.. அரும்பொருளாய்
நீதிக்கும் நீதியாய் நின்று நிமலையாம்
.. நிச்சயமாய்ச்
சோதிக்கும் சோதியாய்ச் சோதிச் சுடராய்த்
.. துரியவெளி
சாதிக்கும் வண்ணயஞ் சக்திகா மாட்சியைச்
.. சாற்றுமினே (41)
 
சாற்றுமின் அன்னையைச் சந்தமும் சிந்தும்
.. சகலமுமாய்ப்
போற்றுமின் ஆடையும் பொன்னு மணியும்
.. புனைகுவித்தே
ஆற்றுமின் அன்னைகா மாட்சி அவளென
.. ஆய்ந்தறிந்தே
நேற்றுமுனின்று நிகழ்வருங் காலமும்
.. நேர்வெல்லுமே (42)
 
வெல்வோம் அவளடிக் கீழ்நின்று பொல்லா
.. வினைகளையச்
செல்வோம் அவள்திருச் சந்நிதிக் கேசென்று
.. சித்திரமாய்ச்
சொல்வோம் அவள்பெயர் சுந்தரி காமாட்சி
.. சூழவந்(து), அ,
கல்வோம் எனலின்றிக் கைகூப்பி நிற்போம்
.. கருத்தொன்றியே (43)
 
ஒன்றே உலகவ் வுலகமும் சோதர
.. ஒற்றுமையாய்
நின்றே நிலவுமெந் நெஞ்சமும் தீமை
.. நினைப்பறியா(து)
அன்றே கருணையிற் காமாட்சி நம்மை
.. அரவணைக்கச்
சென்றேமுன் னேறும் சிறிதுமில் லைபகை
.. செப்புவதே (44)
 
செப்பு வதுமவள் சீர்த்திய யாமிந்தச்
.. சென்மத்திலே
ஒப்பு வதுமவ் வொருத்தியே தெய்வமென்(று)
.. உள்ளுணர்ந்தே
தப்பு வதுமில்லை தாயவள் காமாட்சி
.. தாட்பணிக்கே
எப்பு வனச்சுகம் ஏயினும் வேண்டோம்
.. இவைதிண்ணமே (45)
 
திண்ணமே கொண்டவர் திண்ணிய ராகத்
.. திகழ்ந்ததற்பின்
எண்ணமே வேறெதும் என்செயும் மாயஅவ்
.. வெண்ணமும்தன்
வண்ணமே மக்களின் வாழ்வை நடத்துமோ
.. வாய்த்தஇரு
கண்ணுமே கல்விநற் செல்வமாம் காமாட்சி
.. கன்னிகையே (46)
 
கன்னியே உன்னைக் கடவுளர்க் கெல்லாம்
.. கடவுளெனப்
பன்னியே அந்தாதிப் பண்ணூறும் பாடிப்
.. பரவிநிதம்
சென்னியே உன்றன் திருவடி ஏற்றிச்
.. சிரசெழுத்தை
முன்னியே மாற்றவும் மூண்டனம் காமாட்சி
.. முன்வெற்றியே (47)
 
வெற்றிமேல் வெற்றிதான் வெற்றுரை யல்லஇவ்
.. வீறுரைகள்
பற்றிமேல் பற்றியப் பாதாம் புயத்தைப்
.. பணிந்தவொன்றால்
சுற்றுமேல் சுற்றிச் சுழலும் வினையெலாம்
.. சூழ்ந்தொழித்தோம்
கற்றுமேல் கற்றுக் கடைத்தேறக் காமாட்சி
.. காத்தவளே (48)
 
காத்தவ ளேவான் கயிலையார் பங்கிற்
.. கனியமுதாய்ப்
பூத்தவ ளேயன்று பொன்னகர்க் காஞ்சியிற்
.. போந்தமர்ந்து
மூத்தவ ளேயண்டம் மூன்றையும் உந்தியுள்
.. மூண்டடக்க
வாய்த்த ளேஎமை வாழ்த்துகா மாட்சி
.. வனமயிலே (49)
 
மயிலே அனையவான் மாதே குகனை
.. மகிழ்ந்துபெற்ற
குயிலே அனையர் குலமே இனிதொரு
.. கொள்கைநலம்
பயிலே எனஎமைப் பாலிக்கும் காமாட்சி
.. பார்க்கமுன்நீ
வெயிலே யணையா வியன்பொழில் வண்ணை
.. விழைபவளே (50)

Wednesday, July 11, 2012

காமாட்சியம்மன் அந்தாதி (பாடல்கள் 31 - 40)

வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
 
(பாடல்கள் 31 - 40)
 
அறிந்த தனைத்தும் அவளென் றறிந்தோம்
.. அதன்வழியே
புரிந்த தனைத்தும் அவளென்று போந்தோம்
.. புலனொடுக்கித்
தெரிந்த தனைத்தும் அவளென்று தேர்ந்தோம்
.. தெளிவிலிவை
விரிந்த தனைத்தும்கா மாட்சியியேல் நெஞ்சம்
.. வியக்குமன்றே (31)
 
வியக்கும் படியவள் விந்தைவிஞ் ஞான
.. விளக்கமுமாய்
இயக்கும் படியினி தேயிருப் பாள்நலம்
.. எண்ணிலவாய்ப்
பயக்கும் படியெந்தப் பஞ்சை யையும் ஒரு
.. பார்வையிலே
கயக்கும் படியறுத் தாளுவள் காமாட்சி
.. காவியமே (32)
 
காவிய மேஎனக் கல்லொடு மண்ணும்
.. கனிவித்துயிர்
ஓவிய மேஎன உன்னொளி கூட்டி
.. உரைப்பதற்கே
மேவியம் மேநினை மேன்மேலும் வேண்டினம்
.. மேலெழுந்து
தாவியு மேமடல் தாழைசூழ் வண்ணைத்
.. தரங்கிணியே (33)
 
தரங்கிணி காமாட்சி தாள்மற வா(து)உன்
.. தயைபெறவே
நெருங்கணி யாகமுன் நின்றெம் குறையெலாம்
.. நேர்ந்துரைத்தோம்
குரங்கணி யாய்க்கனி கோடெறிந் தாடக்
.. குளிர்வனம்சூழ்
மருங்கணி யாம்வண்ணை மாமதிற் கோயில்
.. மகிழவந்தே (34)
 
வந்தேம் தெளிந்தேம் வருதுயர்க் கெல்லாம்
.. வகையிழந்தே
நொந்தேம் எனவும் நுடங்கு நிலையை
.. நொடியில்விட்டேம்
செந்தேன் பிலிற்றுமுன் சிங்காரத் தோட்டம்
.. சிறக்கஎதிர்
கொந்தேய் குழலிகா மாட்சி குளிரருள்
.. கூர்ந்ததுமே (35)
 
கூர்ந்தது மன்றிக் குறைவினை தீர்ந்தோம்
.. குறைவினையே
தீர்ந்தது மன்றித் தெளிவொன்று சார்ந்தோம்
.. தெளிவொன்றையே
சார்ந்தது மன்றிச் சமத்துவம் போந்தோம்
.. சமத்துவமே
போந்தது மன்றிப் பொலிந்தனம் காமாட்சி
.. புண்ணியமே (36)
 
புண்ணியம் நீயந்தப் புண்ணியம் யாவுக்கும்
.. பூத்தமுதற்
கண்ணியம் நீயந்தக் கண்ணியம் யாவுக்கும்
.. காட்சிமுந்த
எண்ணிய நீயந்த எண்ணங்கள் யாவும்
.. இயக்கவன்றோ
நண்ணிய நீவண்ணை நாடினை காமாட்சி
.. நாரணியே (37)
 
நாரா யணிநீ நவின்மறை நான்கும்
.. நயந்தொழுகும்
பாரா யணிநீ பரமனார் அன்றே
.. பகுத்துரைத்த
சீரா யணிஎழு நாலா கமும்நீ
.. சிரமிசையாம்
பேரா தணிந்தனம் பேறுறக் காமாட்சி
.. பெட்டகமே (38)
 
பெட்டகம் போலப் பிறங்குமுன் பாலே
.. பெரும்பற்றையாம்
இட்டகம் போற்றி இனிது புரந்தனம்
.. என்றென்றுமே
திட்டகம் போலத் திரைகடல் வாழ்வில்
.. தெரிந்தெம் கண்ணிற்
பட்டகம் பீரமும் நீயன்றோ காமாட்சி
.. பாங்கினியே (39)
 
பாங்கினி றைவான் பயன்தரு மாறு
.. பழுத்திருக்கும்
தீங்கனி நீஎன்றே தேடினம் கண்டோம்
.. திரண்டசுகம்
தாங்கனித் தின்பத் தனிப்பெரு வாழ்வும்
.. தழைப்பதுண்டே
ஆங்கினி காமாட்சி யாவுக்கும் நின்னருள்
.. ஆதிக்கமே (40)

Monday, July 9, 2012

காமாட்சியம்மன் அந்தாதி (பாடல்கள் 21 - 30)

வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி
 
(பாடல்கள் 21 - 30)
 
சிறப்பவள் நீநெஞ்சில் செந்தமிழ் மூன்றும்
.. சிறுபொழுதில்
நிறைப்பவள் நீஎந்த நீசரும் செய்த
.. நெடும்பிழையை
மறப்பவள் நீஅவர் மற்றுமங் குய்ய
.. மழைக்கருணை
இறைப்பவள் நீவண்ணை ஈச்சுரி நீஎமை
.. ஈன்றவளே (21)
 
ஈன்றவ ளாகி இறையவ ளாகி
.. எமக்குதவத்
தோன்றுவ ளாகிஅத் தோன்றாளு மாகித்
.. துணிவதற்கும்
சான்றவ ளாகிச் சமரசம் ஆகிச்
.. சயநெறியே
ஆன்றவ ளாயெமை ஆள்வதும் காமாட்சி
.. ஆதரமே (22)
 
ஆதா ரமும்நீ அபயமும் நீஎன்(று)
.. அழுதழுதுன்
பாதார விந்தம்யாம் பற்றிப் புலம்பிப்
.. பதறல்நிதம்
காதாரக் கேட்பினும் காக்க வராமல்நீ
.. கன்னெஞ்சமே
சாதா ரணம்கொளின் சார்வதென் காமாட்சி
.. சாம்பவியே (23)
 
சாம்பவி சங்கரி சாரும் பிரணவி
.. சத்தியம்போல்
தாம்பவித் தேமுன் தழையும்கா மாட்சி
.. தருமிணிவாய்
தேம்புவித் தெம்குறை தீர உனக்கே
.. தெரியவைத்தோம்
யாம்புவிக் காட்பட யாதினி மேற்றடை
.. யாமளையே (24)
 
யாமளை அன்பொன்றே யாதுமாய் வாழமெய்
.. யாண்டுமுற்றோம்
போமளை போட்டி பொறாமை புகைச்சலும்
.. பொய்ம்மையுமே
தாமுளை சாகும் தருமம் வளரும்
.. தயாபரியாம்
கோமளை வண்ணைக்கா மாட்சி எனும்தாய்
.. குளிர்க்கண்ணிலே (25)
 
கண்ணிலே அன்னவள் காட்சியே வைகும்
.. கருதுநெஞ்சம்
எண்ணிலே அன்னவள் எங்ஙன் வசப்படல்
.. என்பதுறும்
பண்ணிலே அன்னவள் பாடலே வந்து
.. பரிணமிக்கும்
மண்ணிலே அன்னைகா மாட்சியல் லாற்பிறர்
.. மாண்புமென்னே (26)
 
என்னே உனையாம் இகபர மென்னும்
.. இரண்டிலும்தான்
முன்னே வணங்கும் முதுபெரு ளென்ற
.. முறைமைகண்டு
பொன்னே எனவும் பொருத்தக் கருதிப்
.. பொலிவதுற்றோம்
அன்னேகா மாட்சி யருளுக யாமுன்
.. அடைக்கலமே (27)
 
அடைக்கல மாம்எம் அறிவைத் தெளிவாய்
.. அனைத்துவரும்
நடைக்கல மாம்எது நன்றுதீ தென்று
.. நடுவுறுத்தும்
விடைக்கல மாம்எவ் விளைவையும் வென்று
.. விரைந்தெழவே
படக்கல மாம்வண்ணைக் காமாட்சி பக்தி
.. படைமின்களே (28)
 
படைகொண் டெழுவோம் பதிகொண் டெழுவோம்
.. பவனிவெற்றிக்
குடைகொண் டெழுவோம் குடிகொண் டெழுவோம்
.. குவலயமே
தடைகொண் டெழினும் தயார்தயார் என்றே
.. தகர்த்தெறியக்
கடைகொண் டெழுகுவம் காமாட்சி தணையங்
.. கால்பணிந்தே (29)
 
கால்பணி வோமவள் கைபணி வோமவள்
.. காட்சிதர
மேல்பணி வோமவள் மெய்பணி வோமதன்
.. மேலுமருள்
பால்பணி வோமவள் பாடல் பணிவோம்
.. பரிந்துரைத்த
நூல்பணி வோமெலாம் நுண்ணிடைக் காமாட்சி
.. நோன்பறிந்தே (30)

Sunday, July 8, 2012

காமாட்சியம்மன் அந்தாதி (பாடல்கள் 11 - 20)

வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி(பாடல்கள் 11 - 20)
 
வாக்குக் கினியாள் மனத்துக் கினியாள்
.. வளருமனப்
போக்குக் கினியாள் புலனுக் கினியாள்
.. புலனமையும்
நோக்குக் கினியாள் நுகரற் கினியாள்
.. நுகருமருள்
தேக்குக் கினியாள் திருவண்ணைக் காமாட்சி
.. தேவியுமே (11)
 
தேவி அவளென்போம் தெய்விகம் பூக்கத்
.. திகழ்மணிப்பூ
வாவி அவளென்போம் வாழ்வாங்கு வாழ்ந்து
.. வளம்தருவோர்க்(கு)
ஆவி அவளென்போம் அப்பாலும் தத்துவம்
.. அத்தனைக்கும்
சாவி அவளென்போம் சந்ததம் காமாட்சி
.. சாரணியே (12)
 
சாரணி அண்ட சராசரம் யாவையும்
.. சார்ந்தியக்கும்
காரணி கண்டம் கறுத்தஎங் கண்ணுதற்
.. காதலுக்கே
பூரணி கொண்மெய்ச் சொர்க்கமும் நின்னாற்
.. புலர்ந்தெழுமே
வாரணி கொங்கைக்கா மாட்சியாம் வண்ணைசூழ்
.. வான்மழையே (13)
 
மழையே மழையின் மணமே மணம்பெறு
.. மண்பயனே
பிழையே எளியோம் பெரிது புரிந்திப்
.. பிறவியெலாம்
விழையேம் இணையடி வீணெனப் போந்தோம்
.. விழுந்தழிவை
அழையேம் இனியும் அடைக்கலம் வண்ணை
.. அதிசயமே (14)
 
அதியச மென்றே அனவ ரதமுமெய்
.. அன்பர்குழாம்
துதிசெய வென்றே தகளறு வண்ணையந்
.. தொல்பதியில்
விதிசெய வென்றே விழைந்திருப் பாளெங்கள்
.. வித்தகிதான்
மதிசெய வென்றேகா மாட்சி எனயாம்
.. வழங்கிடவே (15)
 
வழங்குவாள் வாரி வளங்கள்யாம் வாழ்கென
.. வாழ்த்தொலித்து
முழங்குவாள் நான்மறை முற்றுமவ் வண்டங்கள்
.. மோதுறவே
கழங்குவான் மீன்களும் கோள்களு மேயவள்
.. கைத்தலமேற்
புழங்குவாள் காமாட்சி பொன்விளை யாட்டிவை
.. பொய்யில்லையே (16)
 
இல்லை யெனினும் இருப்ப தெனினும்
.. இயம்புமெந்தச்
சொல்லையு மேபொருள் சூழப் பயில்வாள்
.. சுகவெளியின்
எல்லை யுலும்கூத் தியற்றுவாள் அவ்வெண்ணம்
.. என்னவென்றே
வல்ல வெவர்தாம் வகுப்பரெம் காமாட்சி
.. வைப்பிதுவே (17)
 
வைப்பது வாய்ப்புகல் வானோரும் பாய
.. வரிந்தமுதென்(று)
உய்ப்பது வாய்ப்பர யோகி யரும்பரிந்(து)
.. உள்ளொலியில்
மொய்ப்பது வாய்ப்பவ மோகன வாழ்வில்
.. முனைபவரும்
துய்ப்பது வாய்ப்பொலி யும்திருக் காமாட்சி
.. தோத்திரமே (18)
 
தோத்திர மென்ற துறைதொறும் சென்று
.. தொகுத்தமையும்
சாத்திர மென்ற சகலமும் கற்றதன்
.. சாரத்தையும்
பாத்திர மென்ற படைப்பினுட் கூட்டியாம்
.. பார்க்குமெலாம்
ஷேத்திர மென்ற சிறப்புகொள் வண்ணையஞ்
.. செல்வியன்றே (19)
 
செல்வி யவள்புகழ் செல்லு மிடமெலாம்
.. சேர்த்துதவும்
கல்வி யவள்புதுக் காவிய மாம்பல
.. கற்பனைக்கும்
நல்வியப் பாமகள் நாளும்கா மாட்சி
.. நயந்தெமக்குச்
செல்வியப் பாமெய்ச் சிவகதி பண்ணிச்
.. சிறப்பவளே (20)

Saturday, July 7, 2012

காமாட்சியம்மன் அந்தாதி (பாடல்கள் 1 - 10)

வண்ணையம்பதி அருள்மிகு காமாட்சியம்மன் அந்தாதி

படைப்பு:

சக்தி சரணமெனச்
.. சாற்றிப் படைப்பதற்கே
பக்தியொடும் தமிழைப்
.. பாடினேன், அம்பிகைக்கே.

காப்பு

வந்தாதி யாய்நின்ற வண்ணக்கா மாட்சியின்மேல்
அந்தாதி பாடுவதற் கஞ்சலித்தேன் - சிந்தாத
நம்பிக்கை யோடு நடக்குமிந் நூலுக்குத்
தும்பிக்கை யானே துணை

அந்தாதி

நாமாட்சி செய்ய நலம்வரும் வாணர்க்கு
.. நல்லிசையோ(டு)
ஆமாட்சி செய்ய அணிவரும் சொல்யாப்(பு)
.. அரவணைத்துப்
பூமாட்சி செய்யப் புகழ்வரும் வண்ணையம்
.. பொற்கொடியாம்
காமாட்சி செய்ய கருணை வரும்வழி
.. கண்டதுமே. (1)

கண்ட பிணிபோம் கவலை களும்போம்
.. கவனமின்றிக்
கொண்ட பிறவிக் கொடுமைகளும் போம்வெறும்
.. கொள்கைகளாய்
விண்ட பெருமையும் வீராப்பும் போம்புகழ்
.. வெற்றியுமே
செண்டு புடைதரச் சேரும்கா மாட்சியைச்
.. சிந்திக்கவே. (2)

சிந்திப்போம் நாளெல்லாம் சிந்திப்ப தோடும்
.. செழுந்தமிழால்
வந்திப்போம் வாழ்வெலாம் வந்திப்ப தோடும்
.. வழித்துணையாய்
முந்திப்போம் புண்ணிய மூர்த்தியு மாமவள்
.. மொய்ம்புணர்ந்தே
சந்திப்போம் வண்ணையஞ் சக்திகா மாட்சி
.. சரணங்களே. (3)

சரணு மவள்கொண்ட சஞ்சலத் தையெல்லாம்
.. சாடவரும்
முரணு மவள் அன்பின் மூப்பறிந் துண்மை
.. முதுபடைக்கும்
அரணு மவள்பதம் அண்டுவோர்க் கெல்லாம்
.. அபயமருள்
பரணு மவள்பதி வண்ணைக்கா மாட்சி
.. பவமணியே (4)

பவமணி தெய்வப் பதமணி வானோர்
.. பரிந்துணரும்
தவமணி இன்பத் தமிழ்மணி ஈசர்க்குத்
.. தாமுகந்த
சிவமணி எம்மவர் செம்மணி என்றுனைச்
.. சிந்திக்கவே
நவமணி யும்பொனும் நல்குவை வண்ணை
.. நகர்வல்லியே (5)

வல்லியே வல்ல வராகியே வாழ்வுக்கு
.. வாய்த்தஎலாம்
புல்லியே நின்னருட் போகம் அவையெனப்
.. புந்தி கொண்டும்
சொல்லியே அந்தச் சுவையில் திளைப்போம்
.. சுகிர்தமிகு
மெல்லியே வண்ணையில் மேவுமெங் காமாட்சி
.. மெய்யம்மையே (6)

அம்மையே எந்தையே ஆரமு தேஎன்(று)
.. அயர்விலெலாம்
செம்மையே நின்னைச் செபிப்பதால் நேரும்
.. சிறப்பலவோ
இம்மையே தீமை யெலாம்உருக் கொண்டும்
.. எதிர்த்தின்பங்கள்
தம்மையே காண்பதாம் தண்பொழில் வண்ணைத்
.. தயாநிதியே (7)

நிதியே நிதியின் நிறைபயனே எம்
.. நினைவிலுறு
மதியே மதியின் மயமாம் தெளிவே
.. மதியையும்வெல்
விதியே விதியின் விளைவே எமக்கதில்
.. வெற்றியையும்
கதியே தருவண்ணைக் காமாட்சி யாமுமைக்
.. கற்பகமே (8)

கற்பகத் தாளைஎம் காமாட்சி யாளைக்
.. கமலமுகப்
பொற்பகத் தாளைப் பொலிவுடை யாளைமுன்
.. புண்ணியமாம்
சொற்பகுத் தாளைச் சுவையுடை யாளைச்
.. சுயம்புருவாம்
தற்பகத் தாளைத் தொழுதவள் தாளைத்
.. தழுவுமினே (9)

தழுவு வதுமன்னை தாமரைத் தாளினைத்
.. தாழிசையில்
தொழுவது மன்னை துணையெனச் சொல்லும்
.. துறையதுவாய்
விழுவது மன்னையை வேண்டி அவள்முன்
.. விருத்தமெனும்
வழுவது மன்னைகா மாட்சியே நீக்கெனும்
.. வாக்கினிதே (10)

Friday, July 6, 2012

துளித் துளி - ஒரு முன்னுரை

துளித் துளி - ஒரு முன்னுரை
 
பனிப்பனிக் கவிதைகள் - மணிப்
.. பரல் எனும் கவிதைகள்
தனித்தனிக் கவிதைகள் - சிறு
.. தடம் எனும் கவிதைகள்
 
 
துளித்துளிக் கவிதைகள் - ஒளித்
.. தூற்றல் இக்கவிதைகள்
தளிர்த்தளிர்க் கவிதைகள் - பொறி
.. தட்டிடும் கவிதைகள்
 
 
மின்மினிக் கவிதைகள் - விண்
.. மிறுத்திடும் கவிதைகள்
பொன்மினிக் கவிதைகள் - ஒளிப்
.. பொட்டெனும் கவிதைகள்
 
 
சிறுசிறு கவிதைகள் - பளிச்
.. சிடும்புதுக் கவிதைகள்
குறுகுறுக் கவிதைகள் - நெஞ்சைக்
.. குலுக்கிடும் கவிதைகள்

துளித் துளி - விஷமக் கவிதைகள்

விஷமக் கவிதைகள்
 
கல்கியில் தொடராக வெளிவந்த கவிதைகள்.
 
29/09/1974 :: 1. பலன்
 
தொண்டுக் குழைத்தோர்
.. தொலைவில் இருந்தார் - அதைக்
கொண்டு பிழைத்தோர்
.. கொலுவில் சிறந்தார்
 
06/10/1974 :: 2. தேர்தல்
 
திட்டம் தெரிந்தோர்
.. தேர்தலில் நின்றார்
திட்டத் தெரிந்தோர்
.. தேர்தலில் வென்றார்
 
17/10/1974 :: 4. அன்றும் இன்றும்
 
சங்க காலம்
.. அந்நாள் கண்டார் - பிர
சங்க காலம்
.. இந்நாள் கண்டார்
 
10/11/1974 :: 6. ஜனநாயகம்
 
வாக்குகள் கேட்போர்
.. வாழ்வில் வளர்ந்தார்
வாக்குகள் போட்டோர்
.. யாவும் இழந்தார்
 
01/12/1974 :: 7. வாழத் தெரிந்தவர்
 
உழைக்கத் தெரிந்தோர்
.. உரிமைகளை விட்டார்
பிழைக்கத் தெரிந்தோர்
.. பெருமையே நட்டார்
 
08/12/1974 :: 8. தகுதி
 
அடி, படைத் தலைமை
.. யாருக்குத் தகுதி? - அவரே
அடிப்படைத் தலைவர்
.. பேருக்குத் தகுதி!
 
 

Thursday, July 5, 2012

துளித் துளி - தனியன்கள்

தனியன்கள்
 
நழுவல்
 
குழந்தையைத் தெய்வம்
.. தழுவிக் கிடந்தது
குழந்தை வளரவும்
.. நழுவி நடந்தது
 
ஊற்று
 
மணலைத் தோண்டினேன்
.. தண்ணீர் வந்தது
மனத்தைத் தோண்டினேன்
.. கண்ணீர் வந்தது
 
அக்'கறை'
 
பிறைநிலா பார்த்தேன்
.. குறையென இல்லை
நிறைநிலா பார்த்தேன்
.. கறையெனும் தொல்லை
 
கழுகுக்கண்
 
பறப்பது என்னவோ
.. பரவெளிமேல்தான் - பார்வை
இருப்பது என்னவோ
.. தெருஎலி மேல்தான்
 
நோட்டம்
 
கட்சிகள் எல்லாம்
.. காசுக்குப் போர்வை
லட்சியம் எல்லாம்
.. லாபத்தின் பார்வை
 
கூடினால்
 
ஊடல்மேல் தினமும்
.. உப்புக் கீடுதான் - கொஞ்சம்
கூடுமேல் பணமும்
.. குப்பைக் காடுதான்
 
சமுதாயம்
 
ஊரைக் கூட்டினேன்
.. தேரோட வில்லை
தேரைப் பூட்டினேன்
.. ஊர்கூட வில்லை
 
சீருடை
 
சட்டைகள் உரித்தே
.. சர்ப்பங்கள் திளைக்கும் - கட்சிச் (பல)
சட்டைகள் தரித்தே
.. அற்பங்கள் பிழைக்கும்
 
முதுமை
 
காயே பழுத்தால்
.. கனியாம் என்பர்
கனியே பழுத்தால்
.. இனி,யார் தின்பர்?
 
சுற்றம்
 
பழத் தோட்டத்தைப்
.. பறவைகள் சுற்றும்
பணத் தோட்டத்தை
.. உறவுகள் சுற்றும்
 
இலக்கணம்
 
உள்ளம் விரித்தால்
.. உச்சிப் புலவர்
கள்ளம் சிரித்தால்
.. கட்சித் தலைவர்
 
ஞானோதயம்
 
புத்தர் மலர்ந்தார்
.. போதி மரத்தில் - பல
எத்தர் மலர்ந்தார்
.. சாதி நிறத்தில்
 
சுயநலம்
 
தேவை என்றால்
.. தேடும் உலகம்
சேவை என்றால்
.. ஓடும், விலகும்
 
சிரஞ்சீவி
 
சொற்களைச் சுருக்குவோர்
.. சுகம்பெற வாழ்வார்
சுகங்களைச் சுருக்குவோர்
.. யுகம்பெற ஆள்வார்
 
மீறுங்கால்
 
ஆவல் மிகமிகத்
.. தாவல் நேரும்
தாவல் மிகமிகக்
.. காவல் மீறும்

Wednesday, July 4, 2012

துளித் துளி - உறவுகள்

உறவுகள்
 
பணம்தான் மந்தம் - அதன்
குணம்தான் குந்தம்
 
தாய்சேய் வேறுதான் - அதன்
நோய்வாய் மாறுதான்
 
உறவுமே உண்டு - பணம்
வரவுமேல் கண்டு
 
விரிதலும் ஒருபால் - உடன்
விரிசலும் மறுபால்
 
சுற்றத் தழகு - பணம்
பற்றப் பழகு
 
ஒப்புக் குறவு - வெறும்
மெப்பில் தரவு
 
உறவுக் களவுகோல் - பணம்
மருவக் களவுகோல்
 
அற்ப பேதங்கள் - சந்
தர்ப்ப வாதங்கள்
 
பந்த பாசங்கள் - பண
முந்தும் வேஷங்கள்
 
நடப்பு நாடகம் - மனக்
கடுப்பின் ஊடகம்
 
உதட்டுக் கனிரசம் - உள்
குதட்டும் துளிவிஷம்
 
குடுப்பக் கணக்குகள் - உட்
படும்பொய்ப் பிணக்குகள்
 
பிறையாய் வளரும் - மனக்
கறையால் தளரும்
 
தொந்துமேல் தொடரும் - பகை
வந்துமே இடறும்
 
ஒருமுனை நழுவும்
மறுமுனை தழுவும்
 
கிளைகிளை தாவும் - பாவை
வளைவளை மேவும்
 
தார தம்மியம் - மன
ஓரம் விம்மியும்

Tuesday, July 3, 2012

துளித் துளி - ஜனநாயகம்

ஜனநாயகம்
 
சூழல்கள் தோறும் - கொள்ளை
ஊழல்கள் தேறும்
 
ஜனநாயகம் வாதிக்கும் - எனில்
பணநாயகம் சாதிக்கும்
 
தலைகளை எண்ணுதல் - பின்
தலைமைகள் பண்ணுதல்
 
தேர்தலின் தோறும் - உள்
ஊர் தலை மாறும்
 
பொதுநலம் போர்வை - தனக்(கு)
எதுநலம் பார்வை
 
கொள்கைகள் மாறும் - பணம்
கொள் கைகள் சேரும்
 
கோட்டை பிடிப்பார் - பின்
தேட்டை அடிப்பார்
 
சுருட்ட நிதம்நிதம் - பணம்
திரட்ட விதம்விதம்
 
சகலமும் சுதந்திரம் - பணம்
நகரவும் தந்திரம்
 
சட்ட சபைதான் - தினம்
திட்ட அவைதான்
 
ஓட்டுகள் வேட்டை - பண
நோட்டுகள் கோட்டை
 
வாக்குகள் அப்புறம் - செல்
வாக்குகள் நட்புறும்
 
தேவைக்கு வையும் - பணச்
சேவைக்கு மையம்
 
நீட்டும் நிதிகள் - கை
காட்டும் விதிகள்
 
வாக்குகள் உறுதி - காலப்
போக்கு கொள் மறதி
 
எல்லாம் இலவசம் - எனும்
சொல்லால் வலைநிசம்
 
நாற்காலில் நாட்டம் - எல்லாம்
ஊர்க்காலிக் கூட்டம்
 
காந்திய நாளில் - பணக்
காந்தியம் தாளில்

Monday, July 2, 2012

துளித் துளி - உயிர் எழுத்துச் செய்யுள்

உயிர் எழுத்துச் செய்யுள்
 
அன்பே உலகம்
பண்பே திலகம்
 
ஆற்றுதல் நலமேல்
போற்றுதல் தலைமேல்
 
இன்ப வேட்டை - எலாம்
துன்பக் கோட்டை
 
ஈதல் நல்லது
மோதல் பொல்லது
 
உள்ள உரம்தான்
கொள்ளைத் திறம்தான்
 
ஊதா ரித்தனம்
தீதாம் மெத்தனம்
 
எண்ணிச் செய்வோர்
விண்ணின் உய்வோர்
 
எற்ற இறக்கம்
தேற்றம் பிறக்கும்
 
ஐயமே அறிவு
வையமேல் விரிவு
 
ஒன்று படுவார்
வென்றுவிடுவார்
 
ஓடாய் உழைக்கின்
காடாய்த் தழைக்கும்
 
ஔவியம் பேசேல்
செவ்விய(து) ஏசேல்

Sunday, July 1, 2012

துளித் துளி - கனிச்சீர் ஈரடிகள்

கனிச்சீர் ஈரடிகள்
 
அன்பே அறம்
தெம்பே திறம்
 
பண்பே பலம்
முன்பே நலம்
 
நெஞ்சே நிறை
கொஞ்சேல் குறை
 
தொண்டே திகழ்
உண்டே புகழ்
 
எண்ணம் செயல்
பண்ணும் புயல்
 
துணிவே துணை
பணிவே இணை
 
உழைப்பால் உயர்
பிழைப்பால் பெயர்
 
தொழிலே தொழு
எழிலே எழு
 
கலையே களம்
நிலையே வளம்
 
நன்றே நினை
இன்றே முனை
 
பசித்தே புசி
ருசித்தே ரசி