Wednesday, September 5, 2012

சிரிப்பு

சிரிப்பு
 
புல்லில் சிரிக்கிறேன்
.. என்றுசொல்லிக் - காலைப்
பூம்பனி வைரமாய்
.. மின்னியது!
 
நெல்லில் சிரிக்கிறேன்
.. என்றுசொல்லி - வேர்வை
நித்திலம் பொற்கதிர்
.. மன்னியது!
 
அல்லில் சிரிக்கிறேன்
.. என்றுசொல்லி - வானம்
ஆயிரம் முத்தாரம்
.. வீசியது!
 
வில்லில் சிரிக்கிறேன்
.. என்றுசொல்லி - மேகம்
விண்ணுக்கு வர்ணங்கள்
.. பூசியது!
 
கல்லில் சிரிக்கிறேன்
.. என்றுசொல்லி - ஜீவ
காவியம் சிற்பமாய்த்
.. துள்ளியது!
 
சொல்லில் சிரிக்கிறேன்
.. என்றுசொல்லிக் - கவிச்
சோதியோ அண்டம்வான்
.. அள்ளியது!

No comments:

Post a Comment