Monday, September 17, 2012

அருட்கொடை

அருட்கொடை
 
தூளாய் உருளும் பனிப்பரலே!
துலங்க உன்னுள் நெடும்பனையும்
வாளா இருத்திக் காட்டவல்ல
வனப்பை நீயும் கற்றதெங்கே?
 
செம்மாதுளையாம் கனிச்சிமிழே!
சேர உன்னுள் மணிப்பரலும்
அம்மா வியப்போ(டு) அடுக்கிவைக்கும்
அழகை நீயும் பெற்றதெங்கே?
 
மயிலின் தோகை மணிக்குளமே!
மயங்க உன்னுள் நிறம்பலவும்
பயிலும் வண்ணம் பாய்விரிக்கும்
பாங்கை நீயும் உற்றதெங்கே?
 
தங்க ஓடைத் தகதகப்பே!
தவழ உன்னுள் சலசலப்பும்
பொங்க ஓடி புரண்டு செலும்
புதுமை நீயும் திரண்டதெங்கே?
 
பலவாம் சுளைகொள் பலாப்பழமே!
படலம் படலம் சுவை அவையும்
கொலுவாய் உனக்குள் நிலவ வரும்
குளுமை நீயும் நெய்ததெங்கே?
 
ஏழைக் கவியே உன்னிடம் ஓர்
எளிய சொல்லே உள்ளொளியால்
வாழக் கவிதை வரம்பெறல்போல்
வளமாய் இவையும் பெற்றன காண்!

No comments:

Post a Comment