Tuesday, September 18, 2012

கவி அணங்கு

கவி அணங்கு
 
பாலில் முழுதும் பனி இரவில் - நிலா
பரவி ஒழுகும் தனிவரவில்
வாலிப வல்லிமுன் வந்தனளே - இள
வசந்தம்முன் செல்ல நடந்தனளே
 
உதயம் நீராடும் ஒளிப்பொழுதில் - இந்த
உலகம் சீராடும் துளிவிழுதில்
இதய என் வல்லி எழுந்தனளே - காதில்
ஏதேதோ சொல்லில் வளைந்தனளே
 
மஞ்சன மாலை மணிவெயிலில் - சுடர்
மரகதச் சோலை அணிவயலில்
அஞ்சன வல்லி நின்(று) ஆடினளே - எனை
ஆங்குயிர் கெல்லியும் ஓடினளே
 
காதலி அல்லள்; கவிதை அவள் - வேறும்
கற்பனை அல்லள்; யுவதி அவள்!
ஆதலின் என்னுள் அயின்றனளே - நவம்
ஆயிரம் மின்னப் பயின்றனளே!

No comments:

Post a Comment