Tuesday, September 25, 2012

புதுப்பாப்பா!

புதுப்பாப்பா!
 
பாப்பா ஒண்ணு எங்க வீட்டில்
.. முளைச்சி ருக்குது - அது
படுத்துகிட்டே என்னைப் பார்த்துப்
.. பார்த்துச் சிரிக்குது
 
கேட்பார் இல்லை; தரையில் எம்பிக்
.. காலை உதைக்குது - அதன்
கிட்டப் போனால் பட்டுக் காலால்
.. எட்டி மிதிக்குது
 
அம்மா கிட்டப் போகக் கையை
.. ஆட்டி அழைக்குது - அவள்
அந்தப் பக்கம் மறைஞ்சு போனால்
.. வாயைப் பிளக்குது
 
சும்மா சும்மா பாலுக்காகச்
.. சுத்தி அழுவுது - என்ன
சூழ்ச்சிகள்தான் பண்ணினாலும்
.. சுத்தித் தழுவுது
 
பல்லுகூட முளைக்கலே; தின்
.. பண்டம் கேட்குது - அப்பா
பால் முகத்தைக் கிள்ளிக் கிள்ளிப்
.. பதமே பார்க்குது
 
தொல்லை நித்தம் கொடாமல் தூங்க
.. மாட்டேன் என்குது - போட்ட
தொட்டிலிலும் எட்டிப் பார்த்தே
.. தலைகீழ் தொங்குது
 
தத்துப் பித்துன்னு சுத்திச் சுத்தித்
.. தானே உளறுது - ஒரு
தண்ணி மழையைக் கண்டால் போதும்
.. மண்ணைக் கிளறுது
 
அத்தை அக்கான்னு குதிகுதிச்சே
.. ஆட்டம் போடுது - பார்த்த
அத்தனையும் வேணுமின்னே
.. நோட்டம் போடுது
 
அக்கா நோட்டைத் தூக்கி வச்சே
.. அழகு பார்க்குது - படிச்ச
அடையாளமத்தான் தாள்களையும்
.. கிழிச்சு பார்க்குது
 
சொக்காயையும் டெக்னிக் கலரு
.. ஷோவாய்ப் பண்ணுது - அடே
சுந்தர் இண்ணா அந்தர் ஒண்ணு
.. போடா எண்ணுது
 
பாப்பா புதுப் பாப்பா அதோ
.. படுத்திருக்குது - ஆசு
பத்திரிக்குப் போய் அம்மாதான்
.. வாங்கி வந்தது
 
கேட்பார் இல்லை; பாப்பா பண்ணும்
.. கேலிக் கூத்திது - இன்னும்
கேட்கக் கேட்கச் சொல்லுவேன் நான்
.. நேரம் போதாது

No comments:

Post a Comment