Monday, September 3, 2012

வசந்த ராகம்

வசந்த ராகம்
 
பூக்களைக் கொண்டே பொழுதெலாம் தென்றலின்
.. புத்துயிர் சுவாசிக்கும் - தேன்
ஈக்களைக் கொண்டே இயலிசைநாடக
.. இங்கிதம் வாசிக்கும்
 
சலசல ஓடையில் சங்கீத வீணைகள்
.. சந்தங்களை மீட்டும் - அந்தக்
கலைகொளும் வீணைக் கமகங்களின் நிறம்
.. கந்தருவம் கூட்டும்
 
மாந்தளிர்த்தோரண மையலில் சிக்கி
.. மனம்களி வண்டாகும் - கொடிப்
பூந்தளிர் கோதிப் புனைகுயில் சிட்டுகள்
.. புண்ணியப் பண்பாடும்
 
அரும்(பு)அவிழாத பல்லாயிரம் மொட்டுகள்
.. ஆங்காங்கு கண்வெட்டும் - பனிக்
குறும்புகளாய் அங்குக் கொப்புளிக்கும் தளிர்
.. கோபுர விண்முட்டும்
 
வசந்த வருகையை வா எனச் சொல்லிமெய்
.. வாலிபம் வரவேற்கும் - துணை
இசைந்(து)அநுராக இதயங்கள் எல்லாம்
.. இணைந்து கரம்கோக்கும்

No comments:

Post a Comment