Sunday, September 16, 2012

கைத்திறன்

கைத்திறன்
 
அந்தர வானவில் சிந்தூரச் சேற்றினை
.. அள்ளி இறைத்தவர் யார்? - பிறைச்
சந்திரக் கிண்ணி சரவிளக்கேற்றிச்
.. சற்றே மறைத்தவர் யார்?
 
வண்ணத்துப்பூச்சி வரிகளில் கோல
.. வகையையும் நெய்தவர் யார்? - எழில்
எண்ணற்ற பூக்களும் இந்திர வர்ணமாய்
.. இங்கிதம் பெய்தவர் யார்?
 
பன்னிற நாடாவின் பட்டென வானவில்
.. பாவும் வரிந்தவர் யார்? - அங்குப்
பொன்னிற வண்ணப் பொறிப்பொறியாய் மத்தாப்
.. பூவும் சொறிந்தவர் யார்?
 
மாமயில் தோகை மணிவிசிர் ஆட்டத்தில்
.. மாயம் இழைத்தவர் யார்? - அவை
தாம் ஒயில் ஆகும் தடத்தில் பொற்காசும்
.. தழைய விளைத்தவர் யார்?
 
ஓடைகளில்நீர் உல்லாசக் குமிழி
.. உருளவும் விட்டவர் யார்? - சிறு
காடை குருவிக் கவின்சிறகுக்குள்
.. கவிதைமூச்சிட்டவர் யார்?
 
சொற்களின் கூளத்தில் சுந்தர காவியம்
.. சொக்கப் படைப்பவர் யார்? - பசும்
புற்களின் மேல்பனிப் பொன்னொளி மந்திரப்
.. பூட்டும் உடைப்பவர் யார்?
 
மணிமணிச் செம்புள் மாதுளைக் கெம்பும்
.. மடங்கென வைத்தவர் யார்? - அவை
அணிஅணி யாவும் அடுக்கடுக்காயும்
.. அழகுறத் தைத்தவர் யார்?
 
கன்னியர் நுங்கிளம் கன்னங்கள் தோறும்
.. கவிதை குழைத்தவனே - பின்னர்
மன்னிய மாயமாய் மற்றென்ன ஐயம்?
.. மகிழ்ந்திவை விளைத்தவனே!

No comments:

Post a Comment