Wednesday, June 27, 2012

துளித் துளி - மழை

மழை
 
தூறினால் மழைதான்
மீறினால் பிழைதான்
 
இடைமழை நல்லதாம்
அடைமழை தொல்லைதாம்
 
முகிலொடு முகில்தான் - பின்
திகிலொடு திகில்தான்
 
சூறைக்குச் சொந்தம் - இடிப்
பாறைக்குச் சந்தம்
 
உயிர்களும் உண்ணும்
பயிர்களும் பண்ணும்
 
வானம் வழியும் - எனில்
ஈனம் ஒழியும்
 
நிலத்தை நிறைக்கும் - மக்கள்
நலத்தைப் பெருக்கும்
 
மண்ணின் வாசனை - மழை
பண்ணும் பூசனை
 
பஞ்சம் பசியும் - மழைக்(கு)
அஞ்சி மசியும்
 
மாரி இலையேல் - நலம்
பாரில் இலையே
 
பெய்யவும் இடரும் - பயன்
செய்யவும் தொடரும்
 
ஆற்றுக்கு நண்பன் - உழைச்
சேற்றுக்கு வம்பன்
 
கடலுக்கும் மகன்தான் - வயல்
திடலுக்கு மகான்தான்
 
உயிர்க்கும் வேண்டும் மழை
பயிர்க்கும் தூண்டும்
 
நிலத்துள் நீரின்றேல் - உயிர்க்
குலத்துள் யாரின்றே?

No comments:

Post a Comment