Monday, June 18, 2012

துளித் துளி - கல்வி

கல்வி

முயன்றால் முடியும்
பயின்றால் படியும்.
சுடச்சுடச் செம்பொன் - கல்வி
படப்படக் கம்பன்.

படித்தால் மட்டுமே - செயல்
படைத்தால் கிட்டுமே.

வாசிக்க வருவது
யோசிக்கப் பெறுவது.

பெறவும் துணைதான்
இறைவர்க் கிணைதான்.

ஆய்ந்தால் அறிவு
வாய்ந்தால் விரிவு.

அறிவார்க் கருள்தான்
அறியார்க் கிருள்தான்.

வீம்பினால் வித்தை
சோம்பினால் சொத்தை.

சிந்திக்கத் தூண்டும்
முந்திக்க வேண்டும்.

துறைதொறும் தோற்றம் - கல்வி
பெறப்பெற ஏற்றம்.

அகம்தான் அறியும் - கல்வி
முகம்தான் நெறியும்.

தகவல் அல்ல - அறிவு
புகஉள் செல்ல.

வாழ்க்கை விதிசெயும் - கல்வி
கேள்வி மதிசெயும்.

படிப்பினில் பயன்வரும் - கூடப்
படிப்பினை நயம் தரும்.

எண்ணும் எழுத்தும் - கை
வண்ணம் வழுத்தும்.

நற்றவ போகம் - கல்வி
கற்றவர் யோகம்.

விற்றால் விற்பனர் - கல்வி
பெற்றால் பொற்பினர்.

அறிவால் உள்ளவர் - கல்விச்
செறிவால் வள்ளுவர்.

கற்றால் கலைதான் - அதை
விற்றால் விலைதான்.

படிப்பவை பலபல - மனம்
படிபவை சிலசில.

வாழ்வில் வளமை - கல்வி
கேள்விக் கெழுமை.

அறிவால் எதிலும் - மனம்
விரிவாய்ப் பதிலும்.

கேட்கும் கேள்வி - அறி(வு)
ஏற்கும் வேள்வி.

கோல் எடுத்தால் குரங்காம்
நூல் அடுத்தால் அரங்காம்.

பட்டறிவுப் பாடும் - நூல்
நட்டறிவில் ஊரும்.

ஆழங்கால் ஆண்டும் - கல்வி
வாழுங்கால் வேண்டும்.

படத்தான் பாடும் - நூல்
தொடத்தான் கூடும்.

கற்றோர்க்குக் கண்
மற்றோர்க்குப் புண்.

கற்றது கசடு - எனில்
வெற்றது அசடு.

பல்விதம் கல்வி
வெல்விதம் புகல்வி.

No comments:

Post a Comment