Saturday, June 30, 2012

துளித் துளி - வேண்டுதல் வேண்டாமை

வேண்டுதல் வேண்டாமை
 
சாதிப்போர் வேண்டும் - வெறும்
சாதிப்போர் வேண்டாம்
 
மதிப்போர் வேண்டும் - எதிர்
மதப்போர் வேண்டாம்
 
விற்பனர் வேண்டும் - கலை
விற்பவர் வேண்டாம்
 
கழகம் வேண்டும் - பகைக்
கலகம் வேண்டாம்
 
கலைவரம் வேண்டும் - கொலைக்
கலவரம் வேண்டாம்
 
யுக்தம் வேண்டும் - வெறி
யுத்தம் வேண்டாம்
 
வழிப்படல் வேண்டும் - வெறும்
வழிபடல் வேண்டாம்
 
தடைமாற வேண்டும் - நடை
தடுமாற வேண்டாம்
 
உருப்பட வேண்டும் - வாய்
உருப்போடல் வேண்டாம்
 
கொள்கை வேண்டும் - லஞ்சம்
கொள் கை வேண்டாம்

Friday, June 29, 2012

துளித் துளி - கவியரங்கம்

கவியரங்கம்
(இன்றையக் கவியரங்கங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம்)

அவிநயம் ஆச்சு
கவிநயம் போச்சு

பட்டியல் நீண்டது
பாட்டியல் மாண்டது

சொற்களின் பந்தல் - வெறும்
புற்களின் கந்தல்

யாப்புக்கே ஆப்பு - அரை
யாப்புக்கே வாய்ப்பு

இலக்கண வரட்டி - அதை
விலக்கணும் விரட்டி

சீரங்கம் திருச்சிதான்
பாரெங்கும் முறிச்சுத்தான்

அப்பளந் தட்டுதல் - வெறும்
சப்பைக்கை கொட்டுதல்

அரட்டை அரங்கம் - பொய்
புரட்டுச் சுரங்கம்

வார்த்தை ஜாலங்கள் - இடம்
பார்த்தலங் கோலங்கள்

வெறும்ஆர்ப் பாட்டம் - சொல்
பெரும்போர்க் கூட்டம்

Thursday, June 28, 2012

துளித் துளி - கவிதை

கவிதை
 
உள்மொழி ஊற்று
பண்மொழி மாற்று
 
யதார்த்தங்க ளோடும்
பதார்த்தங்கள் கூடும்
 
செஞ்சொல் சிலிர்ப்புகள் - உள்
நெஞ்சின் ஒலிப்புகள்
 
கருத்தெனும் கவிநயம் - சொல்
பொறுத்துநம் செவிநயம்
 
சுருக்கஎச் சொல்லும் - நமைச்
சுருக்கென வெல்லும்
 
எழுத்துகள் முன்படும்
எண்ணங்கள் பின்படும்
 
கற்பனை கவிதைக்கு - அதன்
விற்பனம் உவகைக்கு
 
சருகெனும் சொற்கள் - கவி
மெருகினில் கற்கள்
 
இலக்கியம் என்பது - கவி
துலக்கிய தெம்பது
 
சந்தவசந்தம் - செவி
முந்த விசைந்தும்

Wednesday, June 27, 2012

துளித் துளி - மழை

மழை
 
தூறினால் மழைதான்
மீறினால் பிழைதான்
 
இடைமழை நல்லதாம்
அடைமழை தொல்லைதாம்
 
முகிலொடு முகில்தான் - பின்
திகிலொடு திகில்தான்
 
சூறைக்குச் சொந்தம் - இடிப்
பாறைக்குச் சந்தம்
 
உயிர்களும் உண்ணும்
பயிர்களும் பண்ணும்
 
வானம் வழியும் - எனில்
ஈனம் ஒழியும்
 
நிலத்தை நிறைக்கும் - மக்கள்
நலத்தைப் பெருக்கும்
 
மண்ணின் வாசனை - மழை
பண்ணும் பூசனை
 
பஞ்சம் பசியும் - மழைக்(கு)
அஞ்சி மசியும்
 
மாரி இலையேல் - நலம்
பாரில் இலையே
 
பெய்யவும் இடரும் - பயன்
செய்யவும் தொடரும்
 
ஆற்றுக்கு நண்பன் - உழைச்
சேற்றுக்கு வம்பன்
 
கடலுக்கும் மகன்தான் - வயல்
திடலுக்கு மகான்தான்
 
உயிர்க்கும் வேண்டும் மழை
பயிர்க்கும் தூண்டும்
 
நிலத்துள் நீரின்றேல் - உயிர்க்
குலத்துள் யாரின்றே?

Monday, June 25, 2012

துளித் துளி - வரலாறு

வரலாறு
 
வாழ்வு நிகழ்ச்சிகள்
தாழ்வுப் புகழ்ச்சிகள்
 
குருதிக் கறைப்படம்
இறுதிவரை கபடம்
 
அரசியல் கொலைக்களம்
கறைசெயும் வலைத்தளம்
 
முன்னால் முரண்தான்
பின்னால் அரண்தான்
 
கனவு களுக்கு
நினைவுச் சுளுக்கு
 
ஆண்டுகள் மேல்தான்
நீண்ட சவால்தான்
 
தொடரும் காலம்தான்
இடரும் கோலம்தான்
 
யுத்த வெறித்திறம்
ரத்த சரித்திரம்
 
ஏடுகள் புரளும்
நாடுகள் மருளும்
 
காலப் பச்சோந்தி
ஏலும் அச்சேந்தி
 
நிகழும் ஒருவாறு - பின்
புகலும் வரலாறு

Sunday, June 24, 2012

துளித் துளி - இல்லறம்

இல்லறம்
 
மனைஅறம் மாண்புகொள் - பெண்
துணைபெறத் தான்புகழ்
 
பெண்மையைப் பெருமைசெய் - அதன்
திண்மையைத் திறமும்செய்
 
குடும்பம் குடும்பம்தான் - அதில்
படும்படும் இன்பம்தான்
 
கட்டிலுக் கிருவர் - காதல்
மட்டிலும் ஒருவர்
 
ஒருவர்க் கொருவர் - அக
உறவில் நிறைவர்
 
காற்கட்டும் உண்டுதான் - அதன்
மேற்கட்டும் கொண்டுதான்
 
அறமே அன்புதான் - காதல்
திறமே தெம்புதான்
 
புணரியல் காவியம் - உடல்
திணறிய ஓவியம்
 
பந்த பாசம் - இடை
வந்த வாசம்
 
பாச பந்தம் - முகம்
மூசும் சந்தம்
 
மையல் கொஞ்சும்தான்
சமையல் கொஞ்சம்தான்
 
ஊடலின் கூடம்
கூடலின் மாடம்
 
ரசங்கள் எதற்கும்
சரசங்கள் மிதக்கும்
 
ரகசியம் காதல் - உயிர்க்(கு)
அவசியம் நேர்தல்
 
ஆண்பெண் வசியம்
காண்ப(து) அவசியம்
 
பொழுதும் புசியும் - வாழ்வு
முழுதும் ரசியும்
 
பகலில் மணந்தார் - இடை
புகலில் இணைந்தார்
 
மாமியார் படித்தனம்
சாமியார் குடித்தனம்
 
மருமகள் குடித்தனம்
வருமிகழ் படித்தனம்
 
அரங்கத் திருமணம் - அந்
தரங்கத் தொருமணம்

Saturday, June 23, 2012

துளித் துளி - திருமணம்

திருமணம்

சொர்க்கத்தில் உறுதி - நகை
ரொக்கத்தில் இறுதி

உடன்படுக் கைதான் - அதற்(கு)
உடன்படிக் கைதான்

வரன்கள் அடக்கம்
சவரன்கொள் தொடக்கம்

பாக்கிய வதிகள் - கடன்
பாக்கி யவதிகள்

வாரிசு யாகம் - அதைக்
கோரி,சை யோகம்

பிள்ளைப் பேறு - வயிறு
கொள்ளச் சோறு

சையோகச் சடங்கும் - கருப்
பையாகத் தொடங்கும்

குழந்தைத் தொழிலகம் - வர
எழுந்த எழிலகம்

கருவறைப் பாசனம் - சிசு
வரவைச்சொல் சாசனம்

கருப்பைக்கே வரவு - கூட
இரப்பைக்கே நிறைவு

புகலும் மணம்தான் - அதன்
நகலும்அம் மணம்தான்

விளக்கும் அணையுமே - உடன்
விளங்கும் அணையுமே

சரசமோ டுறவு - பல
விரசமோ டிரவு

உணர்ச்சிக்கே வேகம் - உடல்
புணர்ச்சிக்கே மோகம்

அணைப்புக்கே சட்டம் - அதன்
பிணைப்புக்கே திட்டம்

விவாகம் மையலால் - மனை
நிர்வாகம் தையலால்

பருவத்துப் பந்தல் - உடன்
உறவொத்துக் கந்தல்

கொடுக்கல் வாங்கல் - ஆண்பெண்
படுக்கைத் தாங்கல்

நடப்பதோ குடும்பம் - கூடக்
கொடுப்பதோ இன்பம்

கவர்ச்சியால் காதல் - அதன்
நுகர்ச்சியால் நோதல்

குடும்பத் தையல்தான் - இற்று
விடும்பல் மையல்தான்

அவதாரமாய் இருக்கும் - பின்
அவ தாரமாய் நெருக்கும்

விரிதலும் உறவுதான் - தொடர்
விரிசலும் பிறகுதான்

காமமேல் வேள்வி - பின்
சேமமேல் கேள்வி

கவர்ச்சிதான் முன்னால் - மனத்
தளர்ச்சிதான் பின்னால்

தொடர்கதைத் தூண்டில் - பின்
இடர்வதைக் கூண்டில்

அடையுமுன் வேகம் - பின்
விடையுமே சோகம்

தாம்பத்யம் ஏற்கும் - பின்
தாம்பத்யம் நோக்கும்

அடங்கினால் சம்பந்தம் - மனம்
முடங்கினால் நிர்ப்பந்தம்

கோட்டைக்கு வேட்கை - அதே
கோட்டைபின் ஓட்டை

பந்த நாட்டம் - உடன்
விந்தை ஆட்டம்

இல்அறம் சிலர்சிலர் - அது
இல்லாஅறம் பலர் பலர்

Friday, June 22, 2012

துளித் துளி - வாழ்க்கை

வாழ்க்கை

வாழும் வேள்வி
நாளும் கேள்வி

சிரமமே சேர்க்கும் - அவ
சரமுமே யார்க்கும்.

வழுக்குமே வாழ்க்கை - பின்
இழுக்குமே யாக்கை

வாழ்க்கை வெறும்கல்
வேட்கை பெரும்கல்.

சதிகளின் கூட்டு
எதிர்கொளும் பூட்டு

உழைத்தால் பிழைப்பு
பிழைத்தால் களைப்பு

சந்தர்ப்பச் சேர்க்கை
வந்தொப்ப வாழ்க்கை

கதிகளின் தாளம்
விதிகொளும் மேளம்

கூலி ஒருபுறம்
கேலி மறுபுறம்

நிலவரம் போலும்
நலமுற ஏறும்

தடுமாறாப் பாதை
தடம் மாறாக் கீதை

வாயால் வருவது
வாய்ப்பால் பெறுவது

பகடைக்காய் ஆட்டம்
பகட்டுக்கரம் ஓட்டம்

பல்லாங்குழிக் கூட்டம்
வல்லார்வழி நாட்டம்

முகத்துதி மூட்டம்
மிகத்துதி நோட்டம்.

பம்மா இயக்கம்
தம்பொருள் மயக்கம்

அகட விகடம்
விகடச் சகடம்

ஏறி இறங்கும்
மீறிக் கிறங்கும்

பரம்பரைப் பசப்பு
கரம்பொறும் கசப்பு

வழிவழிச் சங்கிலி - விளைப்
பழிபழி நம்கிலி

கணம்கணம் பிரச்சினை
பணம்பணம் அருச்சனை

ஓட்டப் பந்தயம்
வாட்டம் முந்தியும்

ஆள் மாறாட்டம் - பின்
னாள் போராட்டம்

உறவுச் சந்தை
துறவு மந்தை

ஒளியின் நிழலும்
வழியிற் சுழலும்

பன்முகப் பாடம்
தன்முக வேடம்

நலங்கிட நடிப்பு - அன்பு
விலங்கிடத் துடிப்பு

பந்த பாசம்
தந்த மோசம்

சுயநலச் சுருட்டல்
அயல்நலம் விரட்டல்

முகமூடிப் போர்வை
அகம்வாழப் பார்வை

வாழையடி வாழை
கூழையடி கூழை

விருப்பங்களே வேட்கை
திருப்பங்களே வாழ்க்கை

உணவுக்கு வேட்டை
உணர்வுக்குச் சாட்டை

விடைகள் பின்வரும்
தடைகள் முன்வரும்

விழுவதும் எழுவதும்
தொழுவதும் வளர்வதும்

ஏக்கம் எதில்தான்?
பார்க்கப் பதில்தான்

Tuesday, June 19, 2012

துளித் துளி - அநுபவம்

அநுபவம்

சிந்தித்தும் சேரும்
நிந்தித்தும் சாரும்.

புண்படும் நெஞ்சம்
பண்படக் கொஞ்சும்.

மனத்தின் அரிப்பு
மவுனச் சிரிப்பு.

வருந்தும் மனம்தான் - பின்
திருந்தும் தினம்தான்.

செயல்களின் மூடம் - பல
புயல்களின் ஓடம்.

சந்திக்கும் தோறும்
நிந்திக்கத் தேறும்.

பெற்றால் பீடம்
கற்றால் பாடம்.

தலையிலே முட்டும் தாள் - பல
நிலையிலே குட்டும் தாள்.

அநுபவ ஆசான் - வெறும்
கனவவை பேசான்.

அடைமழை முன்தான் - காலத்
திடைபிழை பின்தான்.

காலம்கொள் கட்டியம் - அதன்
மேல்உங்கள் வட்டியும்.

பயன்தான் பாடம் - பெறப்
பயந்தால் மூடம்.

Monday, June 18, 2012

துளித் துளி - கல்வி

கல்வி

முயன்றால் முடியும்
பயின்றால் படியும்.
சுடச்சுடச் செம்பொன் - கல்வி
படப்படக் கம்பன்.

படித்தால் மட்டுமே - செயல்
படைத்தால் கிட்டுமே.

வாசிக்க வருவது
யோசிக்கப் பெறுவது.

பெறவும் துணைதான்
இறைவர்க் கிணைதான்.

ஆய்ந்தால் அறிவு
வாய்ந்தால் விரிவு.

அறிவார்க் கருள்தான்
அறியார்க் கிருள்தான்.

வீம்பினால் வித்தை
சோம்பினால் சொத்தை.

சிந்திக்கத் தூண்டும்
முந்திக்க வேண்டும்.

துறைதொறும் தோற்றம் - கல்வி
பெறப்பெற ஏற்றம்.

அகம்தான் அறியும் - கல்வி
முகம்தான் நெறியும்.

தகவல் அல்ல - அறிவு
புகஉள் செல்ல.

வாழ்க்கை விதிசெயும் - கல்வி
கேள்வி மதிசெயும்.

படிப்பினில் பயன்வரும் - கூடப்
படிப்பினை நயம் தரும்.

எண்ணும் எழுத்தும் - கை
வண்ணம் வழுத்தும்.

நற்றவ போகம் - கல்வி
கற்றவர் யோகம்.

விற்றால் விற்பனர் - கல்வி
பெற்றால் பொற்பினர்.

அறிவால் உள்ளவர் - கல்விச்
செறிவால் வள்ளுவர்.

கற்றால் கலைதான் - அதை
விற்றால் விலைதான்.

படிப்பவை பலபல - மனம்
படிபவை சிலசில.

வாழ்வில் வளமை - கல்வி
கேள்விக் கெழுமை.

அறிவால் எதிலும் - மனம்
விரிவாய்ப் பதிலும்.

கேட்கும் கேள்வி - அறி(வு)
ஏற்கும் வேள்வி.

கோல் எடுத்தால் குரங்காம்
நூல் அடுத்தால் அரங்காம்.

பட்டறிவுப் பாடும் - நூல்
நட்டறிவில் ஊரும்.

ஆழங்கால் ஆண்டும் - கல்வி
வாழுங்கால் வேண்டும்.

படத்தான் பாடும் - நூல்
தொடத்தான் கூடும்.

கற்றோர்க்குக் கண்
மற்றோர்க்குப் புண்.

கற்றது கசடு - எனில்
வெற்றது அசடு.

பல்விதம் கல்வி
வெல்விதம் புகல்வி.

Sunday, June 17, 2012

துளித் துளி - இறைமை

இறைமை


கடவுளே காப்பு - மனம்
பட வுளே கூப்பு.


இறைவனை ஏத்து - மனம்
நிறைவென வாழ்த்து.


பரம்பொருள் போற்று - அது
பெரும்பொருள் சாற்று.


தலைக்குமேல் ஒருவன் - நம்
நிலைக்குமேல் இறைவன்.


கடவுளே என்றேன் - கண்ட
விடையுளே நின்றேன்.


அன்பருள் முடிவும் - அந்தச்
செம்பொருள் வடிவம்.


ஆதிக்கே அஞ்சலி - அச்
சோதிக்கே நெஞ்சொலி.


இயற்கையே இறைவன்
செயற்கையே பெறுவன்.


வியக்க ஒருவன் - நலம்
பயக்கும் துறைவன்.


எல்லாநற் புகழும் - அவன்
அல்லாதென் நிகழும்?

துளித் துளி

துளித் துளி

(திருக் குக்குறள்களும் திருக்குக் குறள்களும்)


நூற்பா:
அகவல் அடியில்
தகவல் முடியும்
அரைவஞ் சித்துறை - தனி
உரைஎன் முத்திரை


சந்தக்கவிமாமணி திரு தமிழழகன்


முகவரி:
B5 - ராஜ் பாரீஸ்
மானசரோவர் அடுக்ககம்
மேடவாக்கம் முதன்மைச் சாலை
உள்ளகரம், சென்னை 91
அலைபேசி: 92836 97295

சந்தக்கவிமாமணி தமிழழகன்

சந்தக்கவிமாமணி தமிழழகன்

இயற்பெயர்: வே. சண்முகம்
மற்றோர் புனைபெயர்: திருமந்திரம் சண்முக சுந்தரக் கவிராயர்
(திருமந்திரம் என்பது பிறந்த ஊராகிய தூத்துக்குடியின் பழைய பெயர்)

பெற்றோர்: தந்தை வேலு செட்டியார்; தாயார் வள்ளி அம்மை
பிறந்த நாள்: 21 - 4 - 1929 (சுக்கில ஆண்டு சித்திரத்திங்கள் 8 ஆம் நாள்)

கல்வி:
பழைய பத்தாம் வகுப்புத் தேர்வு. தமிழில் புலவர் பட்டம் பெறுவதற்காக இலக்கண இலக்கியங்கள் எல்லாம் முறையாகப் பயின்றமை

பணி:
திரைப்படங்கள் மூன்றுக்குத் துணை இயக்குநர். ஆறுக்குத் திரப்பாடல்கள் எழுதியவர். திருச்சி சென்னை வானொலி நிலையங்களில் நிலையக் கலைஞராக எழுத்துப்பணியில் நிகழ்ச்சி ஆசிரியர்.
புலமைத் துறைகள்: சோதிடம், வானநூல், ஆருடம், எண்கணிதம், தமிழிசை, மேடை நாடகம். தமிழ்க் கவிதைகளில் எல்லாக் கிளைகளிலும்; ஆசு, சித்திரம், மதுரம் வித்தவாம் எனும் நாங்கு வகைகள், இலக்கண இலக்கிய நுட்பங்கள் திரிபு, இயைபு, மடக்கு, சிலேடை ஆகியவை.

எழுத்துப்பணி:
உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே பதினாறு வயதில் வெண்பா, கட்டளக் கலித்துறை, சிந்துகள் எழுதியவை.
இவருடைய முதற்கவிதைகள், குழந்தை இன்பம், என் குழந்தை எனும் இரண்டும் 1946 ஆம் ஆண்டு நவம்பரில் கலைமகள் தீபாவளி மலரிலும் பாரதிதாசனின் க்யில் ஏட்டிலும் வெளிவந்தமை. அந்நாள் முதல் தமிழ்நாட்டின் எல்லா ஏடுகளிலும் தொடர்ச்சியாக வெளிவந்தமை.

நூல்கள் (வெளி வந்தவை): தமிழழகன் கவிதைகள் (முனைவர் மு வ முன்னுரை)
ஒளியத்தேடி (கவிதைகள்) முனைவர் சி பாலசுப்ரமணியன் முன்னுரை
மழலை அமுதம் (சிறுவர் கவிதைகள்) (குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா முன்னுரை)
பூமத்தாப்பு (குழந்தைப் பாடல்கள்)
காமாட்சி அந்தாதி
காமாட்சி திருமுறை வெண்பாத்திரட்டு
துளித்துளி (சின்னஞ்சிறு கவிதைகள்)
காவிய ஓவியம் (கம்பராமயணக் கவிதை நாடகம்) (வானொலியில் ஒலிபரப்பானது)

நூல்கள் (வெளிவர வேண்டியவை):அன்னை அபிராமி (அபிராமி அந்தாதிப் பாடல்களின் விளக்கத் தொடர் கட்டுரைகள், ஆனத்த விகடனில் தொடரா வெளிவந்தது)
வைகறை கானம் (கவிதைகள்)
அரங்கேற்றம் (கவிதைகள்)
பட்டுச்சிட்டு ( சிறுவர் பாடல்கள்)
இசைப்பாடல்கள்: 300 க்கும் மேல் வானொலியிலும் மேடைகளிலும் இசைத்தட்டுகளிலும் வெளிவந்தவை.
குட்டிக் கதைகள் (முன்னூறுக்கும் மேற்பட்டவை)
இசை நாடகங்கள், கவிதை நாடகங்கள் (வானொலியில் ஒலிபரப்பான 'முருகா சரணம்', 'சாகுந்தல சகிதம்' (நாட்டிய நாடகங்கள்).
சொல்லும் பொருளும்: சொல் விளக்கம், சொற்றொடர் விளக்கம், உவமைத்தொடர் விளக்கம், மரபுத்தொடர் விளக்கம், பழமொழி விளக்கம், இலக்கண விளக்கம்.
அறிவுரை வெண்பாக்கள்: ஐயாயிரத்துக்கும் மேல்
கந்தர் கட்டளை: ஆயிரம் கட்டளைக் கலித்துறைகள்
கட்சிக் கலம்பகம்: ஆயிரம் வெண்பாக்கள்
பிரபந்தங்கள்:
திருப்போரூர் மும்மணி மாலை
மகாலட்சுமி மாலை
மகாலட்சுமி அந்ததி
காமாட்சி அலங்காரம் (அணி இலக்கண விளக்க நூல், சித்திரக் கவிதைகள் உட்பட)
வரிப்பாடல்கள்: ஈரடிக் கவிதைகள், நான்கு அடிக் கவிதைகள், பன்னீரடிக் கவிதைகள், பதினாரடிக் கவிதைகள்
இலக்கியக் கட்டுரைகள்: ஏடுகளிலும் வானொலியிலும் வெளிவந்தமை

சில பின் குறிப்புகள்:ஒளியைத் தேடி (கவிதை நூல்), சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி-லிட் வகுப்புக்கும் இளங்கலை வகுப்புக்கும் பாடநூலாக வைக்கப் பெற்றுள்ளன. சாகித்ய அகாடமி ஆண்டிதோறும் வெளியிடும் பாரதிய கவிதா தொகுப்பில் இவருடைய கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. யுனெஸ்கோ ஐ நா சுகாதார நிறுவனம் (பாரீஸ்) வெளியிடும் சிறந்த கவிதைகள் தொகுப்பிலும் இவருடைய கவிதைகள் இடம் பெற்றூள்ளன.

விருதுகள்/பரிசுகள்:இந்திய அரசின் ஒலிபரப்புத்துறை நடத்திய இந்திய அளவிலான கவிதைப் போட்டியில் தமிழில் முதல் பரிசு பெற்றமை.
மாநில அரசின் பாரதிச் தாசன் விருது பெற்றமை
பாரதி பரம்பரை, பாரதிதாசன் பரம்பரை, சந்தக் கவிமணி, கவிமாமணி, தமிழ்ச்சுடர், தமிக் காவலர், கவிஞானி ஆகிய விருதுகள், பல இலக்கிய நிறுவனங்களால் பெற்றமை.

இதுவரை எழுதியுள்ளவை:கவிதைகள் ஒரு இலட்சத்திற்கு மேலும்
தனிப்பாடல்கள், வெண்பாக்கள், கட்டளைக் கலித்துறைகள் முப்பதாயிரத்திற்கு மேலும் இருக்கும்.

பொறுப்புப் பணிகள்:திருவொற்றியூர் பாரதி பாசறையின் நிறுவனருள் ஒருவர், நிரந்தரத் தலைவர்
சென்னைப் பாரதி கலைக்கழகத்தில் தொடர்ந்து துணைத்தலைவர்
பாரதிதாசனால் நிறுவப்பெற்ற தமிழ்க்கவிஞர் பெருமன்றத்தின் முன்னாள் துணைச் செயலர், இந்நாள் கௌரவத்தலைவர்

குடும்பம்:மங்கல மனைமாட்சி: திருமதி நாகரத்தினம், பள்ளீத் தலைமை ஆசிரியர் (ஓய்வு)
நன்கல மக்கள் சாட்சி: ஆண்பிள்ளைகள் ஐவர்
திருமண நாள்: 28 - 03 - 1957 ஞாயிறு தைப்பூச நிறைமதி நாளில், தமிழறிஞர் முனைவர் மு வரதராசனின் தலைமையில்.