Wednesday, October 17, 2012

கேள்விகள்

கேள்விகள்
 
சுதந்திரம் என்பதே
.. சுயநலம் பேணவா? - இல்லை
இதந்தரும் நன்மைகள்
.. எல்லோரும் காணவா?
 
உரிமைகள் என்பதே
.. ஒருசிலர்க் கெட்டவா? - இல்லை
பெருமை எல்லோர்க்குமாய்ப்
.. பெரும்பலன் கிட்டவா?
 
கடமைகள் என்பதே
.. கண்துடைப் பாக்கவா? - இல்லை
உடைமைகள் வந்திங்கே
.. உன்னதம் பூக்கவா?
 
செல்வங்கள் என்பதே
.. சிற்சிலர் சொந்தமா? - இல்லை
பல்வகை உழைப்பினர்
.. பாட்டுக்குச் சொந்தமா?
 
தாயகம் என்பதே
.. தனித்தனிக் கூட்டமா - இல்லை
தூயகருத்தொன்றித்
.. துலங்கு நீரோட்டமா?
 
ஒருமைப்பாடென்பதே
.. உள்ளுத்ததோர் கேள்வியா - இல்லை
அருமைப் பண்பாட்டுக்கே
.. அருந்தவ வேள்வியா?
 
பாரதம் என்பதே
.. பழையதோர் வாதமா? - இல்லை
பூரதமாய் இன்று
.. புலர்ந்த சங்கீதமா?
 
மனிதர்நாம் என்பதே
.. மறந்து போகவா? - இல்லை
இனிதுயர் நல்கியும்
.. இந்தியர் ஆகவா?
 
வினாக்களைக் கேட்டுநாம்
.. வெறுமைதான் கொள்ளவா -இல்லை
கனாக்களில் மூழ்கிடாக்
.. கடமைமேல் துள்ளவா?

No comments:

Post a Comment