Friday, October 12, 2012

நம்மால்தான்

நம்மால்தான்
 
நன்றியினால் வாலாட்டும்
.. நாய்கூட பின்னொருநாள்
அன்றிதனைச் செய்யாமல்
.. அலட்சியமாய் மறந்துவிடும்!
 
காரணம் அந் நன்றிமனம்
.. கடுகளவும் கொள்ளாத
நா,ரணமாம் மனிதரெனும்
.. நாம்தானே வளர்க்கின்றோம்!
 
கரைந்துகரைந்(து) இரந்துண்ணும்
.. காகமுமே பின்னொருநாள்
மறந்து தம்முள் ஒற்றுமையை
.. மாறாகத் துறந்துவிடும்
 
ஏனென்றால் இனப்பற்றே
.. எள்ளளவும் இல்லாத
நானென்ற அகந்தையராம்
.. நாம்தானே அழைக்கின்றோம்!
 
பிறர் உதிரம் உறிஞ்சிஉண்ணும்
.. பேய்முட்டைகளும் ஓர்நாள்
வர, அதிலே தம் இனமும்
.. வாழாமல் செத்துவிடும்
 
ஏனென்றால் அவற்றினுக்கே
.. இரை,நஞ்சாய்க் குருதிகொண்டு
தான்நின்ற நாம்தானே
.. தாராளம் வழங்கிவிட்டோம்!

No comments:

Post a Comment