Friday, November 30, 2012

ஸ்ரீ சக்தி உலா (26-30)

ஸ்ரீ சக்தி உலா (26-30)
 
மாமனப் பூட்டு மயானத்தி - இருள்
மாயையும் ஓட்டும் தியானத்தி
நாமணக்கும் புகழ் அஞ்சலி - அவள்
நாமங்கள் அன்றோநம் நெஞ்சொலி (26)
 
அன்னையே நம்பண் திருப்புகழ் - அவள்
அடி அலால் ஏது விருப்புகள்?
மன்னும் அவள் திருச் சந்நிதி - ஒன்றே
மாறாமல் நாம்பெறும் பொன்நிதி (27)
 
உத்தம பத்தியர் ஓர்புறம் - செயும்
ஓங்காரமே அங்குப் பண்பெறும்
சித்தம் எலாம் அவள் ஸ்ரீபுரம் - எனச்
சேர்ந்தங்கு வான்மூட்டும் கோபுரம் (28)
 
பாச மறுத்திடும் பாசத்தாள் - இன்னும்
பஞ்சதசாட்சர பீஜத்தாள்
வீசுமங்குய்ய விலாசினி - அருள்
வித்தக ராஜசிம்மாசனி (29)
 
ராஜராஜேஸ்வர ரங்கிணி - சர்வ
ராகசங்கீத தரங்கிணி
பூஜை புரஸ்கர பூரணி - தாம்
பூல சுகலய காரணி (30)

Thursday, November 29, 2012

ஸ்ரீ சக்தி உலா (21-25)

ஸ்ரீ சக்தி உலா (21-25)

பாகம் பிரியாத பங்கினாள் - அரன்
பாதி அவள் எனத் தங்கினாள்
நாகம் புனைவிரல் நங்கையாள் - திரு
நாரணர்க்காம் அரும் தங்கையாள் (21)

ஸ்ரீசக்கரம் உறும் சண்பகி - உமை
செல்வி எனும் திரியம்பகி
வாசக் கரும்புகொள் வண்ணத்தி - உயிர்
வாழ்விக்கும் மாமகா எண்ணத்தி (22)

முப்புரை சிற்பரை மோகினி - கனல்
மூளும் தவத்திரு யோகினி
அப்புறம் அப்புறம் ஆனந்தி - அவள்
ஆயிரம் செக்கர்மேல் வான் அந்தி (23)

மாயப் பரவெளி மண்டலம் - எலாம்
மாதா அவள்திருக் கண்தலம்
ஆய பெரும்சிதா காசமே - அவள்
ஆடரங்காய் ஒளி வீசுமே (24)

அகத்தழல் மூட்டு நெய் யாகத்தாள் - உள்ளே
அருட்டழல் கூட்டும் தியாகத்தாள்
ஜெகத்தழ கோங்கிடும் செல்வத்தாள் - என்றும்
சிவத்தொடும் சேர்தள வில்வத்தாள் (25)

Wednesday, November 28, 2012

ஸ்ரீ சக்தி உலா (16-20)

ஸ்ரீ சக்தி உலா (16-20)
 
மகிசா சுரபத மர்த்தினி - பனி
மயராஜ பர்வத வர்த்தினி
அகிலாண்ட நாயகி ஆயிழை - என்றும்
அன்பருக் கன்புசெய் சேயிழை (16)
 
பேதைக்கும் பேரருள் கூட்டுவள் - அழும்
பிள்ளைக்கும் பால் சுரந்தூட்டுவள்
ஓதக்கொள் மாகவி ஆக்குவள் - நொந்த
ஊமைக்கும் வாக்குற நோக்குவள் (17)
 
மையப் புருவ மனோன்மணி - எனும்
மாதவள் தேவர்க்கும் தேன்மணி
வையமும் வானும் வருமணி - அவள்
வாழ்வுக்கும் வாழ்வு தருமணி (18)
 
அகில உலகீன்ற அன்னைதான் - அவள்
ஆயினும் என்றென்றும் கன்னிதான் -
திகிலினைத் தூள்செயும் ஆயுதம் - அவள்
திருப்புகழ் பாடுக வாய் இதம் (19)
 
வெள்ளி விரத ஸ்ரீ வித்தியை - பார
விரதம் விரும்பும் ஸ்ரீ நித்தியை
கொள்ளும் நிறைகுடக் கோமளை - நவ
கோணத் துறையும் சியாமளை! (20)

Tuesday, November 27, 2012

ஸ்ரீ சக்தி உலா (11-15)

ஸ்ரீ சக்தி உலா (11-15)
 
மண்டல விண்டலக் கூத்துகள் - அன்னை
மலரடிக் கேஅவை பூத்துகள்
குண்டலம் என்னக் குலுங்குமோ - ரவி
குளிர்மதி ஊசல் நலங்குமோ (11)
 
மூவுலகும் அவள் மோகனம் - அணு
முழுமையும் அன்னவள் வாகனம்
கூவும் கடலும் குமரிசெய் - தெய்வக்
குரவை எனும்நேர் விமரிசை (12)
 
முக்கனித் தீந்தமிழ் முத்தினம் - கால
மூப்புக்கும் மூவாத ரத்தினம்
தெக்கணக் கொற்கைத் திரவியம் - சுடர்த்
திங்களுடன் கோள் மருவியும் (13)
 
மொத்தமும் சேர்ந்தவள் முத்திரை - அன்னை
முன்கழல் ஆடலும் அத்திரை
கத்துமுனை தெற்கில் காண்பதேல் - அங்குக்
கன்னி தவம் செயும் மாண்பதே (14)
 
சான்றோரின் உள்ளொளிச் சங்கம் - அவள்
சத்தியம் காப்போரின் குங்குமம்
வான்தோயும் நல்லற வாணியே - அருள்
வாக்கினுக் காம்பொருள் ராணியே (15)

Monday, November 26, 2012

ஸ்ரீ சக்தி உலா (6-10)


ஸ்ரீ சக்தி உலா (6-10)
சகல கலைதரும் சாரதை - என்றும்
சார்ந்தனுபூதியாய்ப் பார் அதை
புகலும் துணையும் புனிதையே - எந்தப்
புரட்சிக்கும் வித்(து)அவ் வனிதையே (6)

மஞ்சனம் ஆடும் மகமாயி - பரி
மளநயம் கூடும் ஜகமாயி
அஞ்சும்நம் வாழ்விற் கபயமே - அவள்
அழகள் நம் சென்னிக்குபயமே! (7)

மூவர்க்கும் மூத்த முதல்விதான் - சங்க
முத்தமிழ்க் கூடல் புதல்விதான்
யாவர்க்கும் ஆன இறைவிதான் - மற்றும்
யாவுக்கும் தானே கருவிதான்! (8)

தந்தன தந்தன சிந்துகள் - அங்குத்
தறிகெட்டும் ஓடாத பந்துகள்
வந்தனம் வந்தனம் என்றுதான் - அண்டம்
வாழ்த்தும் அன்னையைச் சுழன்றுதான்! (9)

ஊழி அவளுக் கொருபதம் - அதன்
ஒடுக்கம் அவளின் மறுபதம்
காளிமா காளி கருணையே - நோக்கக்
கருதும் நெஞ்சம்மை சரணையே (10)

Sunday, November 25, 2012

ஸ்ரீ சக்தி உலா (1-5)

ஸ்ரீ சக்தி உலா
தேவி சரணமெனத் தேர்ந்த தலங்கள்தொறும்
கோவில் உறைவாளைக் கும்பிட்டேன் - மேவிஅவள்
சீரடிகள் என்றுமென் சிந்தையுமிப் பாவிலுமாய்
வேரடிகொண்(டு) ஊன்றும் விழைந்து


நூல்


குங்குமக் கோவில் கொலுவினாள் - குளிர்
கோமளச் சாந்து நிலவினாள்
மங்கள ஆரத்தி மாலையாள் - சர்வ
மறைகொளும் சாரத்தின் லீலையாள் (1)


அமுத கலையின் அழகினாள் - கோடி
அழகெனும் வெள்ளம் பழகினாள்
இமைப்பில் உலகே இயற்றுவாள் - தேடி
எண்ணரும் ஞானம் பயிற்றுவாள்! (2)


குலமகள் கற்புக் குடியினாள் - அவர்
கொண்டிடும் தாலி முடியினாள்
நலமென் மழலை நயத்தினாள் - காம
நரகருக் கான பயத்தினாள் (3)


ஞானரதமே நடத்துவாள் - செஞ்சீர்
ஞாயிற்றுப் பட்டே உடுத்துவாள்
மோன பதமே இயக்குவாள் - அண்டம்
மொத்தமும் சுற்றி மயக்குவாள் (4)


பூத்துக் கொடியாய்ப் பொலிபவள் - நறும்
புண்ணியர் நாவில் மலிபவள்
காத்துக் குடிஓம்பி வாழ்பவள் - அன்னை
காலமும் காப்பெனச் சூழ்பவள்! (5)