Tuesday, December 4, 2012

ஸ்ரீ சக்தி உலா (41-47)

ஸ்ரீ சக்தி உலா (41-47)
 
சமயங்களுக்கெட்டாச் சக்தியே - எனில்
சமயபுரம் கிட்டும் சித்தியே
உமை சிருங்கார உல்லாசி - சொல்லும்
உஜ்ஜனியும் அவள் நல்லாசி (41)
 
திருக்கட வூரினள் அம்மையே - அவள்
திருத்தலங்கள் தொறும் நம்மையே
அருட்கொடைக் காக்குதல் உண்மையே - அவள்
அற்புதம் என்னென்ன வண்மையே (42)
 
வற்றிடாச் செல்வ வரத்தினள் - மற்றும்
வண்ணை இமயபுரத்தினள்
ஒற்றியூர் வாழ்சசி வோத்தமி - அவள்
உலகம்மை தாம் என ஏத்துமின் (43)
 
ஆழிஅலைஅவள் ஆயிரம் - பெயர்
அர்ச்சனை செய்திட வாயுறும்
வாழி அவள் என வாழ்த்துமே - சூறை
வந்திடித் தும்தலை தாழ்த்துமே (44)
 
ஆம்சிவசக்தியாம் ஆணைமேல் - என்னுள்
ஆவியும் தேன்சொரி வீணையே
தீஞ்சுவை காட்டிடும் தெய்வதம் - அவள்
திருவடிப் பேறன்றோ உய்வதும் (45)
 
மந்திர அட்சதை வல்லியே - அவள்
மணித்திரு நாமங்கள் சொல்லியே
இந்திர போகமும் பற்றுவோம் - அவள்
இணையடிக் கோவிலே சுற்றுவோம் (46)
 
சுற்றச்சுற்றச் சுகம் சூழ்ந்திடும் - நாமம்
சொல்லச்சொல்லத் துயர் வீழ்ந்திடும்
மற்றுமற்றின்பமும் மண்டிடும் - அஷ்ட
மகாலட்சுமி வாசமும் கொண்டிடும் (47)

Monday, December 3, 2012

ஸ்ரீ சக்தி உலா (36-40)

ஸ்ரீ சக்தி உலா (36-40)
 
சேலத்துள் நல்ல சிவகாமி - தில்லைச்
சிதம்பரத்துள்ளே தவகாமி
மூலத்தை வென்ற முழுமையாள் - அவள்
முன்னைக்கும் முன்னை இளமையாள் (36)
 
நங்கைநல்லூர்ச் செல்வ நாயகி - தெய்வ
நாராயணிபஞ்ச சாயகி
சிங்கம் நன்(கு) ஊர்ந்திடும் சீலினி - நாத
சிந்தாமணி ரத பாலினி (37)
 
கம்பாநதி பெறும் காமாட்சி - நம்மாங்
காட்டுப்பதிவரும் வாமாட்சி
அன்பால் கடல்நாகை அம்மைச்சி - அதன்
அரவம் ஒடுக்கிடும் கொம்மைச்சி (38)
 
சோட்டாணிக்கரை பகவதி - அவள்
சொல்லுக்கடங்கா யுகவதி
பாட்டாலும் கொல்லூர்மூ காம்பிகை - கொங்குப்
பண்ணாரி யாளும் ஏகாம்பிகை (39)
 
தூத்துக்குடிசெய் ஓங்காரிதான் - கொடுங்
களூர்க்கண்ணபுரத்து மாரிதான்
வாழ்த்தும் சிருங்கேரி வாசிதான் - எல்லை
வடபத்ர காளியின் ஆசிதான் (40)

Sunday, December 2, 2012

ஸ்ரீ சக்தி உலா (31-35)

ஸ்ரீ சக்தி உலா (31-35)
 
நவராத் திரிகொள் நலங்கினாள் - சக்தி
நாள்தோறும் போற்றத் துலங்கினாள்
சிவராத் திரிபயன் செய்குவாள் - நம்முட்
சிந்தையிலும்கனல் பெய்குவாள் (31)
 
வீட்டினுள் குத்து விளக்கினாள் - மனை
விரதங்கள் ஏற்கும் வழக்கினாள்
பாட்டின் பொருளெனும் பைங்கிளி - ஆதி
பராசக்தி யாய்விரி ஐங்கிளி! (32)
 
கடம்ப வனத்துக் கலைக்குயில் - மற்றும்
கானவேடர்தம் மலைக்குயில்
நடம்பயில் மேட்டு நறுங்குயில் - தில்லை
நாயகி காஞ்சிப் பெருங்குயில் (33)
 
மயிலா புரித்தவ மாலினி - சப்த
மாதரும் ஆகிய சூலினி
கயிலாசருக்கன்புக் காமத்தி - செல்வம்
கடைக்கணிக் கும்புவிச் சேமத்தி (34)
 
ஆனையங் காட்டில் அகிலம்மை - தொண்டர்க்(கு)
அருள வேற்காட்டில் முகிலம்மை
வான்நயம் காட்டும் வடிவம்மை - முல்லை
வயினவி வேதம் படிவம்மை (35)

Friday, November 30, 2012

ஸ்ரீ சக்தி உலா (26-30)

ஸ்ரீ சக்தி உலா (26-30)
 
மாமனப் பூட்டு மயானத்தி - இருள்
மாயையும் ஓட்டும் தியானத்தி
நாமணக்கும் புகழ் அஞ்சலி - அவள்
நாமங்கள் அன்றோநம் நெஞ்சொலி (26)
 
அன்னையே நம்பண் திருப்புகழ் - அவள்
அடி அலால் ஏது விருப்புகள்?
மன்னும் அவள் திருச் சந்நிதி - ஒன்றே
மாறாமல் நாம்பெறும் பொன்நிதி (27)
 
உத்தம பத்தியர் ஓர்புறம் - செயும்
ஓங்காரமே அங்குப் பண்பெறும்
சித்தம் எலாம் அவள் ஸ்ரீபுரம் - எனச்
சேர்ந்தங்கு வான்மூட்டும் கோபுரம் (28)
 
பாச மறுத்திடும் பாசத்தாள் - இன்னும்
பஞ்சதசாட்சர பீஜத்தாள்
வீசுமங்குய்ய விலாசினி - அருள்
வித்தக ராஜசிம்மாசனி (29)
 
ராஜராஜேஸ்வர ரங்கிணி - சர்வ
ராகசங்கீத தரங்கிணி
பூஜை புரஸ்கர பூரணி - தாம்
பூல சுகலய காரணி (30)

Thursday, November 29, 2012

ஸ்ரீ சக்தி உலா (21-25)

ஸ்ரீ சக்தி உலா (21-25)

பாகம் பிரியாத பங்கினாள் - அரன்
பாதி அவள் எனத் தங்கினாள்
நாகம் புனைவிரல் நங்கையாள் - திரு
நாரணர்க்காம் அரும் தங்கையாள் (21)

ஸ்ரீசக்கரம் உறும் சண்பகி - உமை
செல்வி எனும் திரியம்பகி
வாசக் கரும்புகொள் வண்ணத்தி - உயிர்
வாழ்விக்கும் மாமகா எண்ணத்தி (22)

முப்புரை சிற்பரை மோகினி - கனல்
மூளும் தவத்திரு யோகினி
அப்புறம் அப்புறம் ஆனந்தி - அவள்
ஆயிரம் செக்கர்மேல் வான் அந்தி (23)

மாயப் பரவெளி மண்டலம் - எலாம்
மாதா அவள்திருக் கண்தலம்
ஆய பெரும்சிதா காசமே - அவள்
ஆடரங்காய் ஒளி வீசுமே (24)

அகத்தழல் மூட்டு நெய் யாகத்தாள் - உள்ளே
அருட்டழல் கூட்டும் தியாகத்தாள்
ஜெகத்தழ கோங்கிடும் செல்வத்தாள் - என்றும்
சிவத்தொடும் சேர்தள வில்வத்தாள் (25)

Wednesday, November 28, 2012

ஸ்ரீ சக்தி உலா (16-20)

ஸ்ரீ சக்தி உலா (16-20)
 
மகிசா சுரபத மர்த்தினி - பனி
மயராஜ பர்வத வர்த்தினி
அகிலாண்ட நாயகி ஆயிழை - என்றும்
அன்பருக் கன்புசெய் சேயிழை (16)
 
பேதைக்கும் பேரருள் கூட்டுவள் - அழும்
பிள்ளைக்கும் பால் சுரந்தூட்டுவள்
ஓதக்கொள் மாகவி ஆக்குவள் - நொந்த
ஊமைக்கும் வாக்குற நோக்குவள் (17)
 
மையப் புருவ மனோன்மணி - எனும்
மாதவள் தேவர்க்கும் தேன்மணி
வையமும் வானும் வருமணி - அவள்
வாழ்வுக்கும் வாழ்வு தருமணி (18)
 
அகில உலகீன்ற அன்னைதான் - அவள்
ஆயினும் என்றென்றும் கன்னிதான் -
திகிலினைத் தூள்செயும் ஆயுதம் - அவள்
திருப்புகழ் பாடுக வாய் இதம் (19)
 
வெள்ளி விரத ஸ்ரீ வித்தியை - பார
விரதம் விரும்பும் ஸ்ரீ நித்தியை
கொள்ளும் நிறைகுடக் கோமளை - நவ
கோணத் துறையும் சியாமளை! (20)

Tuesday, November 27, 2012

ஸ்ரீ சக்தி உலா (11-15)

ஸ்ரீ சக்தி உலா (11-15)
 
மண்டல விண்டலக் கூத்துகள் - அன்னை
மலரடிக் கேஅவை பூத்துகள்
குண்டலம் என்னக் குலுங்குமோ - ரவி
குளிர்மதி ஊசல் நலங்குமோ (11)
 
மூவுலகும் அவள் மோகனம் - அணு
முழுமையும் அன்னவள் வாகனம்
கூவும் கடலும் குமரிசெய் - தெய்வக்
குரவை எனும்நேர் விமரிசை (12)
 
முக்கனித் தீந்தமிழ் முத்தினம் - கால
மூப்புக்கும் மூவாத ரத்தினம்
தெக்கணக் கொற்கைத் திரவியம் - சுடர்த்
திங்களுடன் கோள் மருவியும் (13)
 
மொத்தமும் சேர்ந்தவள் முத்திரை - அன்னை
முன்கழல் ஆடலும் அத்திரை
கத்துமுனை தெற்கில் காண்பதேல் - அங்குக்
கன்னி தவம் செயும் மாண்பதே (14)
 
சான்றோரின் உள்ளொளிச் சங்கம் - அவள்
சத்தியம் காப்போரின் குங்குமம்
வான்தோயும் நல்லற வாணியே - அருள்
வாக்கினுக் காம்பொருள் ராணியே (15)