Tuesday, December 4, 2012

ஸ்ரீ சக்தி உலா (41-47)

ஸ்ரீ சக்தி உலா (41-47)
 
சமயங்களுக்கெட்டாச் சக்தியே - எனில்
சமயபுரம் கிட்டும் சித்தியே
உமை சிருங்கார உல்லாசி - சொல்லும்
உஜ்ஜனியும் அவள் நல்லாசி (41)
 
திருக்கட வூரினள் அம்மையே - அவள்
திருத்தலங்கள் தொறும் நம்மையே
அருட்கொடைக் காக்குதல் உண்மையே - அவள்
அற்புதம் என்னென்ன வண்மையே (42)
 
வற்றிடாச் செல்வ வரத்தினள் - மற்றும்
வண்ணை இமயபுரத்தினள்
ஒற்றியூர் வாழ்சசி வோத்தமி - அவள்
உலகம்மை தாம் என ஏத்துமின் (43)
 
ஆழிஅலைஅவள் ஆயிரம் - பெயர்
அர்ச்சனை செய்திட வாயுறும்
வாழி அவள் என வாழ்த்துமே - சூறை
வந்திடித் தும்தலை தாழ்த்துமே (44)
 
ஆம்சிவசக்தியாம் ஆணைமேல் - என்னுள்
ஆவியும் தேன்சொரி வீணையே
தீஞ்சுவை காட்டிடும் தெய்வதம் - அவள்
திருவடிப் பேறன்றோ உய்வதும் (45)
 
மந்திர அட்சதை வல்லியே - அவள்
மணித்திரு நாமங்கள் சொல்லியே
இந்திர போகமும் பற்றுவோம் - அவள்
இணையடிக் கோவிலே சுற்றுவோம் (46)
 
சுற்றச்சுற்றச் சுகம் சூழ்ந்திடும் - நாமம்
சொல்லச்சொல்லத் துயர் வீழ்ந்திடும்
மற்றுமற்றின்பமும் மண்டிடும் - அஷ்ட
மகாலட்சுமி வாசமும் கொண்டிடும் (47)

Monday, December 3, 2012

ஸ்ரீ சக்தி உலா (36-40)

ஸ்ரீ சக்தி உலா (36-40)
 
சேலத்துள் நல்ல சிவகாமி - தில்லைச்
சிதம்பரத்துள்ளே தவகாமி
மூலத்தை வென்ற முழுமையாள் - அவள்
முன்னைக்கும் முன்னை இளமையாள் (36)
 
நங்கைநல்லூர்ச் செல்வ நாயகி - தெய்வ
நாராயணிபஞ்ச சாயகி
சிங்கம் நன்(கு) ஊர்ந்திடும் சீலினி - நாத
சிந்தாமணி ரத பாலினி (37)
 
கம்பாநதி பெறும் காமாட்சி - நம்மாங்
காட்டுப்பதிவரும் வாமாட்சி
அன்பால் கடல்நாகை அம்மைச்சி - அதன்
அரவம் ஒடுக்கிடும் கொம்மைச்சி (38)
 
சோட்டாணிக்கரை பகவதி - அவள்
சொல்லுக்கடங்கா யுகவதி
பாட்டாலும் கொல்லூர்மூ காம்பிகை - கொங்குப்
பண்ணாரி யாளும் ஏகாம்பிகை (39)
 
தூத்துக்குடிசெய் ஓங்காரிதான் - கொடுங்
களூர்க்கண்ணபுரத்து மாரிதான்
வாழ்த்தும் சிருங்கேரி வாசிதான் - எல்லை
வடபத்ர காளியின் ஆசிதான் (40)

Sunday, December 2, 2012

ஸ்ரீ சக்தி உலா (31-35)

ஸ்ரீ சக்தி உலா (31-35)
 
நவராத் திரிகொள் நலங்கினாள் - சக்தி
நாள்தோறும் போற்றத் துலங்கினாள்
சிவராத் திரிபயன் செய்குவாள் - நம்முட்
சிந்தையிலும்கனல் பெய்குவாள் (31)
 
வீட்டினுள் குத்து விளக்கினாள் - மனை
விரதங்கள் ஏற்கும் வழக்கினாள்
பாட்டின் பொருளெனும் பைங்கிளி - ஆதி
பராசக்தி யாய்விரி ஐங்கிளி! (32)
 
கடம்ப வனத்துக் கலைக்குயில் - மற்றும்
கானவேடர்தம் மலைக்குயில்
நடம்பயில் மேட்டு நறுங்குயில் - தில்லை
நாயகி காஞ்சிப் பெருங்குயில் (33)
 
மயிலா புரித்தவ மாலினி - சப்த
மாதரும் ஆகிய சூலினி
கயிலாசருக்கன்புக் காமத்தி - செல்வம்
கடைக்கணிக் கும்புவிச் சேமத்தி (34)
 
ஆனையங் காட்டில் அகிலம்மை - தொண்டர்க்(கு)
அருள வேற்காட்டில் முகிலம்மை
வான்நயம் காட்டும் வடிவம்மை - முல்லை
வயினவி வேதம் படிவம்மை (35)